2012-05-16 15:34:57

திருத்தந்தையின் உருவத்தை Benetton என்ற பன்னாட்டு நிறுவனம் தவறாகப் பயன்படுத்தியதைத் தொடர்ந்து எழுந்த ஒரு வழக்கு முடிவுக்கு வந்துள்ளது


மே,16,2012. Benetton என்ற பன்னாட்டு நிறுவனம் 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிட்ட Unhate என்ற ஒரு விளம்பரப் படத்தில் திருத்தந்தையின் உருவத்தைத் தவறாகப் பயன்படுத்தியதைத் தொடர்ந்து எழுந்த ஒரு வழக்கு முடிவுக்கு வந்துள்ளதாக வத்திக்கான் பேச்சாளர் அருள்தந்தை பெதெரிக்கோ லொம்பார்தி இச்செவ்வாயன்று அறிக்கையொன்றை வெளியிட்டார்.
2011ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் Benetton நிறுவனம் வெளியிட்ட விளம்பரப் பட வரிசையில் உலகின் பல உயர் தலைவர்களின் படங்கள் வெளியிடப்பட்டதற்குப் பலத்த எதிர்ப்புக்கள் எழுந்தன.
இந்தப் படவரிசையில் திருத்தந்தையின் படம் வெளியிடப்பட்டதற்காக தன் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்து, இந்நிறுவனம் அந்தப் படத்தை உடனே நீக்கியது. இருந்தாலும், திருத்தந்தையின் படத்தை தவறான முறையில் பயன்படுத்துவது குறித்த ஒரு வழக்கு தொடர்ந்து நடைபெற்றது.
இந்த வழக்கின் முடிவாக, Benetton நிறுவனம் தனது தவறுக்காக முழு பொறுப்பேற்று மன்னிப்பையும் கேட்டுக் கொண்டது என்று அருள்தந்தை லொம்பார்தியின் அறிக்கை கூறுகிறது.
இந்தத் தவறுக்கு இழப்பீட்டுத் தொகையாக எதையும் திருஅவை பெற விரும்பவில்லை என்பதைத் தெளிவுபடுத்திய அருள்தந்தை லொம்பார்தியின் அறிக்கை, இருப்பினும், அறநெறிக்கு எதிராக இந்நிறுவனத்தின் செயல்பாடு இருந்தமையால், திருஅவையின் பிறரன்பு பணிகளுக்கு இந்நிறுவனம் ஓர் அடையாள தொகையை அளிக்க இசைந்துள்ளது என்றும் எடுத்துரைக்கிறது.








All the contents on this site are copyrighted ©.