2012-05-16 15:36:09

தண்ணீரைச் சுமந்து தலை நிமிர்ந்த மிக்கேல் பட்டணம் : வாழ்ந்து காட்டும் வரலாற்றுச் சிறப்பு


மே,16,2012. இந்திய உள்ளாட்சி அமைப்புகளில், தன்னுடைய ஊராட்சியை, இந்தியாவின் சிறந்த கிராமமாக மாற்றியிருக்கிறார், மிக்கேல் பட்டண ஊராட்சித் தலைவர் இயேசு மேரி.
வறட்சியும், உப்பு நிறைந்த நிலத்தடி நீரும், இராமநாதபுரத்தில் உள்ள மக்களை, வேறு பகுதிகளுக்குக் குடியேற வைத்தன. ஆனால், இதே மாவட்டத்தில் உள்ள மிக்கேல் பட்டணத்தில், மழை நீரைச் சேகரித்து, பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டுள்ள குழாய் வழியாக, ஊருணிக்கு கொண்டு செல்கின்றனர். ஒவ்வொரு வீட்டிலும், இந்த அமைப்பு முறைப்படுத்தப்பட்டு, ஊருணிக்குச் செல்லும் பொதுக் குழாயில் இணைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, 800 வீடுகளில், மழைக்காலத்தில் சேகரிக்கப்படும் நீர், ஊருணிக்கு அருகே உள்ள தொட்டியில் மேலும் சுத்திகரிக்கப்பட்டு, ஊரின் அருகே உள்ள இரண்டு ஊருணிகளில் சேகரிக்கப்படுகிறது.
இதனால், சுற்றுப் பகுதியில், நிலத்தடி நீர் மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது; கிணறுகளில் தண்ணீர் குறைவதில்லை; இது, விவசாயத்திற்கு கை கொடுக்கிறது. வறண்ட பூமியில், இது மிகப்பெரும் சாதனை என்கின்றனர், கிராம மக்கள்.
"கல்வியால் மட்டுமே சமூகம், தன்னிறைவு அடையும். 40 ஆண்டுகளுக்கு முன்பு, என்னை என் தந்தை படிக்க வைத்தார். அதுவே, என் வாழ்விற்கு வெளிச்சத்தைத் தந்தது. அதனால்தான், பல்வேறு முன்னேற்றங்கள் சாத்தியமானது,'' என்கிறார், இத்தகைய வளர்ச்சிக்கு முக்கிய காரணமான, 54 வயது ஊராட்சித் தலைவர் இயேசு மேரி.
இந்த சாதனைகள், உள்ளூர் மக்களின் முழுமையான ஈடுபாட்டில் நிறைவேறி உள்ளது. இதற்காக, மிக்கேல் பட்டணம் ஊராட்சிக்கு விருது வழங்கி, உலக வங்கி கவுரவித்து உள்ளது.








All the contents on this site are copyrighted ©.