கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக நடந்த உண்ணாநோன்பு போராட்டம் முடிவு
மே,16,2012. சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஒருவரின் ஆலோசனைக்கு இணங்கி,
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக கடந்த 14 நாட்களாக உண்ணாநோன்பு போராட்டத்தை
மேற்கொண்டவர்கள் இத்திங்களன்று தங்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். சென்னை உயர் நீதிமன்ற
முன்னாள் நீதிபதி A.P.Shah போராட்டக் குழுவினருக்கும் அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தைகளைத்
துவங்க, போராட்டக் குழவினர் தங்கள் உண்ணாநோன்பு போராட்டத்தை நிறுத்தவேண்டும் என்று கேட்டுக்
கொண்டதால், இப்போராட்டம் நிறுத்தப்பட்டுள்ளது என்று போராட்டக் குழுவின் தலைவர்களில் ஒருவரான
விக்டோரியா புஷ்பராயன் கூறினார். மேமாதம் முதல் தேதியன்று 35 பேருடன் ஆரம்பமான
இந்தப் போராட்டம் இரு நாட்களில் 337 பேராக உயர்ந்தது. இவர்களில் பலர் மருத்துவமனைகளில்
சேர்க்கப்பட்டனர். இறுதியில் இத்திங்கள்வரை 67 பேர் தொடர்ந்து 14 நாட்கள் இப்போராட்டத்தில்
ஈடுபட்டிருந்தனர். கூடங்குளம் அணு மின் நிலையத்தின் மூலம் மக்கள் வாழ்வுக்கு எந்தவித
பாதிப்பும் நேராமல் இருப்பதற்கு சட்டப்பூர்வமான அனைத்து உறுதிகளையும் அரசு அளிக்க வேண்டுமென்று
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் (PMANE) எடுத்துவரும் பல முயற்சிகளின் ஒன்றாக இந்த
காலவரையறையற்ற உண்ணாநோன்பு போராட்டம் நிகழ்ந்தது.