50 வயதுக்கு மேற்பட்டவர்களில் புற்றுநோய் காரணமாக இறப்பவர் எண்ணிக்கை 40 விழுக்காடு
குறைந்துள்ளது
மே,15,2012. பிரித்தானியாவில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களில் புற்றுநோய் காரணமாக இறப்பவர்
எண்ணிக்கை 40 விழுக்காடு குறைந்துள்ளது என்று அண்மைய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. 1971ம்
ஆண்டு புற்றுநோய் காரணமாக 21,300க்கும் அதிகமானோர் தங்கள் 50 வயதுக்கு மேல் இறந்துள்ளனர்
என்றும், அந்த எண்ணிக்கை 2010ம் ஆண்டில் 14,000ஆகக் குறைந்துள்ளது என்றும் இவ்வறிக்கை
கூறுகிறது. புற்று நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் வழிகள் முன்னேறியிருப்பது ஒரு
காரணம் என்றாலும், அண்மைய ஆண்டுகளில் 50 வயதைத் தாண்டியோர் மத்தியில் புகைபிடிப்போரின்
எண்ணிக்கை குறைந்துள்ளதும் ஒரு முக்கிய காரணம் என்று இவ்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது. இன்றும்
உலகில் புற்றுநோயின் முதன்மைக் காரணம் புகையிலைப் பயன்பாடு என்று கூறும் இவ்வறிக்கை,
அளவுக்கு அதிகமாய் மதுபானம் அருந்துதல், உடல்பருமன், மற்றும் இயற்கையிலிருந்து நேரடியாகக்
காய்கறிகள் கிடைக்கும் வாய்ப்பு குறைதல் ஆகியவை புற்றுநோய் உருவாகும் பிற காரணங்கள் என்று
இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.