2012-05-14 15:02:07

அகில உலக குடும்பங்கள் நாளையொட்டி ஐ.நா.பொதுச் செயலர் வெளியிட்டுள்ள செய்தி


மே,14,2012. சமுதாயத்தின் பொருளாதார வளர்ச்சிக்குப் பாடுபடும் உழைப்பாளிகளின் குடும்பங்கள் பொருளாதார வளர்ச்சியுடனும், மகிழ்வுடனும் வாழ்வதற்கு அரசுகள் வழி செய்ய வேண்டும் என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
மேமாதம் 15ம் தேதி, இச்செவ்வாயன்று கொண்டாடப்படும் அகில உலக குடும்பங்கள் நாளையொட்டி செய்தி வெளியிட்டுள்ள ஐ.நா.பொதுச் செயலர் இவ்வாறு கூறினார்.
உழைப்பும் குடும்பமும் சமமான முக்கியத்துவம் பெற வேண்டும் என்ற மையக் கருத்துடன் இவ்வாண்டு கொண்டாடப்படும் அகில உலக குடும்பங்களின் நாள் பணியிடங்களில் மிக அதிக நேரத்தையும் சக்தியையும் செலவிடும் தொழிலாளிகளின் பிரச்சனைகளை உணர்வதற்கு ஏற்ற ஒரு நாளாக உள்ளது என்று பான் கி மூன் கூறினார்.
வளரும் நாடுகளில் நிலவும் பணிச்சூழல் இலாபத்தை மட்டும் கவனத்தில் கொள்வதால், பணியாளர்களின் உடல் நலம் மற்றும் அவர்களின் குடும்பங்களில் வளரும் குழந்தைப் பராமரிப்பு பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன என்று பான் கி மூன் தன் செய்தியில் சுட்டிக் காட்டியுள்ளார்.
குடும்ப நலனைப் பாதிக்காத வகையில் வேலை நேரம், விடுமுறை நாட்கள், குழந்தைப் பராமரிப்பு ஆகிய அம்சங்களை உள்ளடக்கிய ஒரு பணிச்சூழல் அனைத்து நாடுகளிலும் உருவாக்கப்படுவது அவசியம் என்று ஐ.நா. பொதுச் செயலர் தன் செய்தியில் வலியுறுத்தினார்.








All the contents on this site are copyrighted ©.