குழந்தைகளைக் கிறிஸ்தவ வாழ்வில் வளர்ப்பது பற்றிய வத்திக்கான் கருத்தரங்கு
மே,09,2012. ஐரோப்பாவின் பல நாடுகளில் மறைக்கல்விப் பணியில் ஈடுபட்டுள்ளோர் கலந்துகொள்ளும்
ஒரு கருத்தரங்கு உரோம் நகரில் இத்திங்கள் முதல் வியாழன் வரை நடைபெறுகிறது. "புதிய
நற்செய்திப் பணி என்ற கண்ணோட்டத்தில் கிறிஸ்தவ வாழ்வின் துவக்கம்" என்ற தலைப்பில் நடைபெறும்
இந்த 12வது ஐரோப்பிய கருத்தரங்கில் 7 முதல் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளை கிறிஸ்தவ வாழ்வில்
வளர்ப்பது பற்றிய எண்ணங்கள் பரிமாறப்படுகின்றன. இரண்டாம் வத்திக்கான் பேரவையின் ஐம்பதாம்
ஆண்டு, திருஅவை மறைகல்வி நூலை வெளியிட்ட இருபதாம் ஆண்டு, வருகிற அக்டோபர் மாதம் திருஅவை
துவக்க உள்ள விசுவாச ஆண்டு ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்து சிறப்பிக்கும் வண்ணம் இந்தக்
கருத்தரங்கு நடத்தப்படுகிறது. இப்புதனன்று புனித மரியா பசிலிக்காப் பேராலயத்தில்,
கர்தினால் Peter Erdo, அவர்கள் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் இக்கருத்தரங்கில் பங்கேற்ற
அனைவரும் கலந்து கொண்டனர்.