இரவுப் பொழுது ஊர் உறங்கிய நேரம் தலையணை கண்ணீரால் நனைந்தது இனம் புரியாத பாரம்
மனதில் நாளின் நிகழ்வுகள் அடுக்கடுக்காய் சந்தித்த ஆள்கள், காதில் விழுந்த சொற்கள். நட்பின்
புறக்கணிப்புக்களா? இல்லை, அறியாமையின் வெளிப்பாடா? வேண்டுமென்றே சொல்லப்பட்டவையா? இல்லை
எதிர்பார்ப்பின் ஏமாற்றங்களா? காரணம் புரியாமல் தவிக்கின்றது மனது. இறைவா! நீ வழிகாட்டு. கலங்கிய
கண்களுக்குத் தெளிவைக் கொடு! பேதலிக்கும் புத்திக்கு உரமூட்டு! நட்டவரும் வளர்த்தவரும்
சுற்றமும் சுகமும் பொன்னும் பொருளும் எல்லாம் என்னைவிட்டு அகன்று போயினும் என்ன
துன்பம் என்னை வாட்டினாலும் இறைவா! உனக்கு ஒரேயொரு நிபந்தனை நீ மட்டும் என்னோடு
எப்போதும் இருக்க வேண்டும். குளிரோ வெயிலோ மழையோ பனியோ பூமிக்கு மேலோ கீழோ நீ
என்னுடன் இருக்கவே செய்கிறாய். அதை உணர்ந்து வாழ நீ என்னை உணர்த்திக் கொண்டே இருக்க
வேண்டும். இன்று போதும் இந்த நிபந்தனை உனக்கு!