கிறிஸ்துவின் தலைமைத்துவம் அவரின் பணிவானப் பணிகளில் வெளிப்பட்டது - திருப்பீடச் செயலர்
மே,03,2012. கிறிஸ்துவின் தலைமைத்துவம் அவர் புரிந்த பணிவானப் பணிகளில் வெளிப்பட்டது
என்று திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்த்தோனே கூறினார். புத்துயிர் தரும்
ஆவி என்ற ஓர் இத்தாலியக் கழகத்தின் 40ம் ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு திருப்பலி
ஆற்றிய கர்தினால் பெர்த்தோனே, கிறிஸ்துவே நமது வாழ்வின் மையம் என்பதை வெளிப்படுத்த தயங்கவேண்டாம்
என்று தன் மறையுரையில் கூறினார்.
விசுவாசிகள் குடும்பத்திற்கு ஆற்றும் ஒவ்வொரு
பணியிலும் முழு மூச்சுடன் ஈடுபடும்போது, திருஅவையும் இவ்வுலகமும் புத்துயிர் பெறுவது
உறுதி என்று கர்தினால் பெர்த்தோனே எடுத்துரைத்தார். மே மாதம் 30 முதல் ஜூன் மாதம்
3ம் தேதி வரை மிலான் நகரில் நடைபெற உள்ள ஏழாவது அனைத்துலக குடும்பங்கள் மாநாட்டைக் குறித்துப்
பேசிய கர்தினால் பெர்த்தோனே, அந்நிகழ்வுக்கு ஒரு முன்னேற்பாடாக குடும்பங்களில் ஆவியானவரின்
புத்துணர்ச்சியை வளர்க்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.