மே,03,2012. வடகொரியா, சீனா ஆகிய நாடுகள் உலகிலேயே பத்திரிகைச் சுதந்திரம் மிகக் குறைவாக
உள்ள நாடுகள் என்று ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. மே மாதம் 3, இவ்வியாழனன்று உலக
பத்திரிகைச் சுதந்திர நாள் கடைபிடிக்கப் படுவதையொட்டி, உலகின் 197 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட
கருத்துக் கணிப்பின் முடிவுகள் இவ்வியாழனன்று வெளியிடப்பட்டுள்ளன. பத்திரிகைச் சுதந்திரம்
அதிகம் குறைந்துள்ள 12 நாடுகளில் வடகொரியா, சீனா, மியான்மார், வியட்நாம் ஆகிய நாடுகள்
அடங்கியுள்ளன. இந்தக் கருத்துக் கணிப்பின்படி உலகிலேயே ஆசிய நாடுகளில் பத்திரிகைச்
சுதந்திரம் பெருமளவு குறைந்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது. லாவோஸ், இலங்கை, சிங்கப்பூர்,
மலேசியா, கம்போடியா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் இச்சுதந்திரம் அதிகம் காணப்படவில்லை
என்று இவ்வறிக்கை கூறுகிறது. உலகில் வாழும் மக்கள் தொகையில் ஆறில் ஒருவரே, அதாவது,
14.5 விழுக்காட்டு மக்களே பத்திரிகைச் சுதந்திரம் நல்ல நிலையில் உள்ள நாடுகளில் வாழ்கின்றனர்
என்றும் இவ்வாய்வு அறிக்கை கூறுகிறது.