2012-04-30 16:09:23

கவிதைக் கனவுகள் ...... தொழில் - மகாகவி பாரதியார்


இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே!
யந்திரங்கள் வகுத்திடுவீரே!
கரும்பைச் சாறு பிழிந்திடுவீரே!
கடலில் மூழ்கிநன் முத்தெடுப்பீரே!
அரும்பும் வேர்வை உதிர்த்துப் புவிமேல்
ஆயிரந்தொழில் செய்திடு வீரே!
பெரும்புகழ் நுமக்கேயிசைக்கின்றேன்.
பிரமதேவன் கலையிங்கு நீரே!

மண்ணெடுத்துக் குடங்கள் செய்வீரே!
மரத்தை வெட்டி மனை செய்குவீரே!
உண்ணக் காய்கனி தந்திடுவீரே!
உழுது நன்செய்ப் பயிரிடுவீரே!
எண்ணெய், பால்நெய் கொணர்ந்திடுவீரே!
இழையை நூற்றுநல் லாடைசெய்வீரே!
விண்ணி னின்றெமை வானவர் காப்பார்!
மேவிப் பார்மிசைக் காப்பவர் நீரே!

பாட்டும் செய்யுளும் கோத்திடுவீரே!
பரத நாட்டியக் கூத்திடுவீரே!
காட்டும் வையப் பொருள்களின் உண்மை
கண்டு சாத்திரம் சேர்த்திடுவீரே!
நாட்டிலேயறம் கூட்டிவைப்பீரே!
நாடும் இன்பங்கள் ஊட்டிவைப்பீரே!
தேட்டமின்றி விழியெதிர் காணும்
தெய்வமாக விளங்குவீர் நீரே!








All the contents on this site are copyrighted ©.