இலங்கை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை மிக விரைவில் அமுல்படுத்த ஐ.நா பொதுச்செயலர் கோரிக்கை
ஏப்ரல்,30,2012. இலங்கை அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்ஸாவிடம் வலுவான அரசியல் அதிகாரம் உள்ள
நிலையில், கூடிய விரைவில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்
என்று ஐ.நா பொதுச்செயலர் பான் கி மூன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்தியாவுக்குப்
பயணம் மேற்கொண்டிருந்த பான் கி மூன், ‘இந்தியா டுடே‘க்கு அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு
கூறியுள்ளார். தீவிரவாதத்துக்கு எதிரான போர் என்ற கடினமான வழியை இலங்கை மேற்கொண்டதைத்
தான் மதிக்கும் வேளை, இராணுவ நடவடிக்கையின் இறுதி சில மாதங்களில் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள்
கொலலப்பட்டது மற்றும் மனித உரிமைகள் மிக மோசமாக மீறப்பட்டது குறித்து பொருத்தமான சமூக
அரசியல் வழியில் பதிலளிக்குமாறு இலங்கை அரசுத்தலைவரிடம் கேட்டுக்கொண்டதாகக் கூறினார்
ஐ.நா. பொதுச்செயலர். இலங்கை அரசே நியமித்த நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை
நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ள ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன்,
போர் குறித்த முழுமையான பொறுப்பு கூறும் பொறிமுறை மிக விரைவில் உருவாக்கப்பட வேண்டும்
என இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஸாவை விண்ணப்பித்துள்ளார்.