2012-04-27 15:12:47

வட இலங்கையில் கொத்து வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு


ஏப்ரல்,27,2012: இலங்கையின் வடபகுதியில் கொத்து வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.
நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஐநாவின் நிபுணர் ஒருவர் வெடிக்காத கொத்து வெடிகுண்டுகள் இலங்கையில் வடபகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்ததாக AP செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
கடந்த மாதத்தில் ஒரு குழந்தை வெடிபொருள் விபத்து ஒன்றில் கொல்லப்பட்ட இடத்துக்கு அருகில் இந்த அபாயகரமான ஆயுதம் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
2009ம் ஆண்டில் முடிவுக்கு வந்த உள்நாட்டுப் போரில் கொத்து வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டதை இது காண்பிக்கிறது. ஆனால், அனைத்துலக ஒப்பந்தங்களின்படி தடை செய்யப்பட்ட இப்படியான ஆயுதத்தை பயன்படுத்தியதாகக் கூறப்படுவதை முன்னர் மறுத்தது போலவே இப்போதும் இலங்கை அரசு மறுத்துள்ளது.
கொத்து வெடிகுண்டுகளைத் தடை செய்யும் அனைத்துலக ஒப்பந்தம் ஒன்று 2010 ம் ஆண்டில் அமலுக்கு வந்தது.
ஆனால், இலங்கை, அமெரிக்க ஐக்கிய நாடு, சீனா, இரஷ்யா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் உட்பட வேறு சில நாடுகள் அதில் கையெழுத்திடவில்லை.
கொத்து வெடிகுண்டுகளைச் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்ட ஆயுதங்கள் என்று கூறி அமெரிக்க ஐக்கிய நாடு அவற்றை 1960ம் ஆண்டில் வியட்நாமிய போரில் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.