2012-04-27 15:13:00

இலங்கையில் மத சகிப்புத்தன்மை குறைந்துள்ளது


ஏப்ரல்,27,2012: இலங்கையில் மதச் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக, அங்கு சக மதங்களை மதிக்கும் சகிப்பு மனப்பான்மை குறைந்துவரும் போக்கு அண்மைக் காலமாக தீவிரமடைந்துவருவதாக அக்கறைகொண்ட குடிமக்கள் என்ற குழுவினர் அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.
தேசிய அமைதி அவை, மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம், விழுது மனிதவள மேம்பாட்டு நிறுவனம், தாய்மாரும் புதல்வியரும் அமைப்பு, போரினால் பாதிக்கபட்ட பெண்களுக்கான அமைப்பு, காணாமல்போயுள்ளவர்களின் குடும்பங்களுக்கான அமைப்பு என பல அமைப்புகளுடன், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் சிலரும் இன்னும் பல சமூகப் பிரதிநிதிகளும் உட்பட 200க்கும் அதிகமான கையொப்பங்களுடன் இந்த அறிக்கை வெளியாகியிருக்கிறது.
தம்புள்ளையில் கடந்த 60 ஆண்டுகளாக சட்ட ஆவணங்களுடன் இயங்கி வருகின்ற பள்ளிவாசலையும் அந்தப் பகுதியில் இருக்கின்ற இந்துக் கோவிலையும் அகற்ற வேண்டும் என்று நடத்தப்பட்ட போராட்டங்களையும், பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகை நிறுத்தப்பட்டமையையும் சுட்டிக்காட்டியிருக்கின்ற அந்த அறிக்கை, சட்டம் ஒழுங்கைப் பேண வேண்டியவர்கள் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மனவருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இலங்கையில் போருக்குப் பின்னரானச் சூழலில், இனச்சிறுபான்மை சமூகங்களுக்கு அநீதிகள் இழைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அக்கறைகொண்ட குடிமக்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.








All the contents on this site are copyrighted ©.