2012-04-26 15:07:20

முல்லைப்பெரியாறு அணை வலுவாக உள்ளது: வல்லுநர் குழு


ஏப்ரல்,26,2012. முல்லைப்பெரியாறு அணை வலுவாகவே இருக்கிறது என்றும், அங்கு புதிய அணை வேண்டாம் என்றும் உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு ஒருமனதாக பரிந்துரைத்துள்ளது.
அந்த அணை வலுவாக உள்ளதா, அப்பகுதியில் புதிய அணை ஒன்று கட்டப்பட வேண்டுமா என்று இந்திய உச்சநீதிமன்றம் இரு கேள்விகளை எழுப்பி, அது தொடர்பாக ஓர் அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு வல்லுநர் குழுவொன்றைப் பணித்தது.
தமிழகத்தின் சார்பில் நீதிபதி ஏ ஆர் லக்ஷ்மணனும், கேரளா சார்பில் நீதிபதி கே டி தாமஸும் அந்த வல்லுநர் குழுவில் உறுப்பினர்களாக இருந்தனர்.
உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் அந்தக் குழு பல ஆய்வுகளை மேற்கொண்டு தமது அறிக்கையை இப்புதனன்று (25.4.12) உச்சநீதிமன்றத்தில் ஒரு மூடிய உறையில் சமர்ப்பித்துள்ளது.
அக்குழுவில், தமிழகத்தின் சார்பில் உறுப்பினராக இருந்த ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.லக்ஷ்மணன் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விபரங்களை தற்போது கூற முடியாது என்று பி.பி.சி.க்கு அளித்த பேட்டியொன்றில் தெரிவித்தார்.
தற்போதைய அணை உறுதியாக உள்ளது என்பதிலும் அங்கு புதிய அணை தேவையில்லை என்பதிலும் ஒத்த கருத்துக்கள் இருந்தாலும், வேறு சில அம்சங்களில் மாற்றுக் கருத்துக்களும் இருந்தன என்றும் அவர் மேலும் கூறினார்.
முல்லைப்பெரியாறு அணை தொடர்பிலான வழக்கு வரும் மே மாதம் நான்காம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது என்றும், அப்போது இந்த வல்லுநர் குழுவின் அறிக்கை இரு மாநிலங்களுக்கும் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.