2012-04-25 14:45:17

மலேரியா ஒழிப்பு நடவடிக்கையில் இந்தியத் திருஅவை


ஏப்ரல் 25,2012. இந்தியாவில் ஆண்டுதோறும் 2,05,000 பேரும், உலகில் 6,55,000 பேரும் மலேரியாவால் இறக்கின்றவேளை, வடகிழக்கு இந்திய மாநிலங்களில் இந்நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது இந்திய கத்தோலிக்கத் திருஅவை.
ஏப்ரல் 25 இப்புதன் அனைத்துலக மலேரியா நோய் தினம் கடைப்பிடிக்கப்பட்டதையொட்டி செய்தி வெளியிட்ட இந்திய ஆயர் பேரவையின் செய்தித் துறை இத்தகவலை வெளியிட்டது.
மேலும், இத்தினம் குறித்து செய்தி வெளியிட்ட WHO என்ற உலக நலவாழ்வு நிறுவனம், தென் கிழக்கு ஆசியாவில் 130 கோடிப் பேர் மலேரியா நோயின் அச்சுறுத்தலை எதிர்நோக்குகின்றனர் என்றும், இந்நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கையில் சமுதாயத்தின் எல்லாத் துறைகளும் ஈடுபட்டால் மட்டுமே இந்நோயை ஒழிக்க முடியும் என்றும் கூறுகிறது.
கொசுக்களால் பரவும் மலேரியாவால் தென் கிழக்கு ஆசியாவில் கடந்த ஆண்டில் 2 கோடியே 80 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டனர், இவர்களில் 38 ஆயிரம் பேர் இறந்தனர் என்றும் WHO நிறுவனம் கூறுகிறது.
2010ம் ஆண்டில் சுமார் 330 கோடிப் பேர் இந்நோயால் தாக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“பல துறையினரின் கூட்டு முயற்சி : மலேரியா நோய்த் தடுப்புக்கு முதலீடுகள், வாழ்வைப் பாதுகாத்தல்” எனும் தலைப்பில் இவ்வாண்டு இத்தினம் கடைப்பிடிக்கப்பட்டது.







All the contents on this site are copyrighted ©.