சூடான் எல்லைப் பிரச்சனைக்குத் தீர்வு காண, சர்வதேச சமுதாயம் உதவ பேராயர் அழைப்பு
ஏப்ரல்,24,2012. சூடானுக்கும் தென் சூடானுக்கும் இடையே எழுந்துள்ள எல்லைப் பிரச்சனைக்குத்
தீர்வு காண சர்வதேச சமுதாயம் உதவ வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் தென் சூடான் தலைநகர்
ஜூபாவின் பேராயர் Paulino Lukudu Loro. தென் சூடான் எல்லைப்பகுதியை நோக்கி பெரிய அளவில்
சூடான் படைகள் அனுப்பப்படுவதாகவும், எண்ணெய் வளப்பகுதியான Heglig குறித்த விவாதங்கள்
பெரும் மோதலாக உருவெடுத்துள்ளதாகவும் கவலையை வெளியிட்ட பேராயர், இந்தப் பிரச்னைக்கான
தீர்வு சர்வதேச தலையீட்டின் மூலம் பெறப்பட முடியும் என்றார். சூடான் விமானப்படையினர்,
தென்சூடான் எல்லையில் தொடர்ந்து குண்டுவீசித் தாக்கி வருவது குறித்த ஆழ்ந்த கவலையையும்
வெளியிட்டார் பேராயர். தென்சூடானுடன் எவ்வித பேச்சுவார்த்தைகளுக்கும் முன்வரப் போவதில்லை,
துப்பாக்கிக் குண்டுகளே பேசும் என சூடான் அரசுத்தலைவர் Omar al Bashir வெளியிட்ட கருத்து,
தென் சூடான் மக்களை பெரும் வருத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார் பேராயர்
Lukudu Loro.