சீனாவிற்கான திருப்பீட அவையின் மூன்று நாள் கூட்டம் வத்திக்கானில்
ஏப்ரல்,24,2012. இவ்வாண்டு அக்டோபர் மாதம் துவக்கப்படவிருக்கும் விசுவாச ஆண்டின் பின்னணியில்
சீனக் கத்தோலிக்கர்களுக்கு விசுவாசக்கல்வி வழங்கும் வழிமுறைகளை மேம்படுத்துவது குறித்து
சீனாவிற்கான திருப்பீட அவையின் மூன்று நாள் கூட்டம் வத்திக்கானில் இடம்பெற்று வருகிறது. திருப்பீட
அதிகாரிகள், சீன கத்தோலிக்க திரு அவையின் பிரதிநிதிகள், துறவு சபைகளின் அங்கத்தினர்கள்
ஆகியோரைக் கொண்டு 2007ம் ஆண்டு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களால் உருவாக்கப்பட்ட
இவ்வவை, சீனக் கத்தோலிக்கர்களை விசுவாசத்தில் உறுதிப்படுத்தும் வழிகளை ஆராய்ந்து செயல்படுத்தி
வருகிறது. இதற்கிடையே, ஃபீதேஸ் செய்தி நிறுவனத்தின் கூற்றுப்படி, இம்மாதம் இடம்பெற்ற
இயேசு உயிர்ப்புத் திருவிழாவின்போது சீனாவில் 22 ஆயிரத்து 104 பேர் கத்தோலிக்க மறையைத்
தழுவியுள்ளனர்.