கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக AICUF மாணவர்கள் மூன்று நாள் உண்ணாநோன்பு போராட்டம்
ஏப்ரல்,23,2012. கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக மக்கள் மேற்கொண்டுள்ள போராட்டத்திற்கு
ஆதரவு தெரிவிக்கும் விதமாக, ஆந்திராவின் நான்கு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் இஞ்ஞாயிறு
வரை இடிந்தகரையில் மூன்று நாள் உண்ணாநோன்பு போராட்டத்தை மேற்கொண்டனர். நாட்டின் முன்னேற்றத்திற்கு
அணுமின் சக்தி மிக இன்றியமையாதது என்று கூறி மக்களை தவறாக வழிநடத்தும் இந்திய அரசு, இயற்கையைப்
பாதுகாக்கும் வகையில் ஏனைய சக்திகளைக் கொண்டு நாட்டை முன்னேற்ற முடியும் என்றும் போராட்டத்தில்
ஈடுபட்ட மாணவர்கள் கூறினார். AICUF என்று அழைக்கப்படும் அகில இந்திய கத்தோலிக்கப்
பல்கலைக் கழக மாணவர்கள் அமைப்பின் உறுப்பினர்களான இந்தக் கல்லூரி மாணவர்கள், அணு உலைகளால்
ஏற்படும் பல்வேறு ஆபத்துக்களை மக்களுக்கு எடுத்துரைப்பதும் தங்கள் எதிர்காலப் பணியாக
இருக்கும் என்று கூறினார்கள். கூடங்குளம் அணு மின் நிலையத்தை ஆரம்பிக்கக் கூடாது என்ற
கோரிக்கையுடன், இந்தியாவில் உள்ள அனைத்து அணுமின் நிலையங்களையும் நிறுத்திவிட்டு, மாற்று
வழிகளில் சக்தி பெறும் முயற்சிகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையையும்
அரசின் முன் வைக்கப்போவதாக இம்மாணவர்கள் கூறினர்.