2012-04-19 15:16:09

வத்திக்கான் இரகசிய ஆவணங்கள் காப்பகத்தின் 400வது ஆண்டு நிறைவு


ஏப்ரல்,19,2012. பல நூற்றாண்டுகளாக திருத்தந்தையர்கள் எழுதிய மடல்கள், மற்றும் பிறரிடமிருந்து திருத்தந்தையர்கள் பெற்ற கடிதங்கள், வெவ்வேறு நூற்றாண்டுகளில் திருஅவையில் நடந்த பொதுச் சங்கங்களின் ஏடுகள் ஆகிய அனைத்தும் தன்னிகரற்ற கருவூலமாய் வத்திக்கானில் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன என்று வத்திக்கான் இரகசிய ஆவணங்கள் காப்பகத்தின் காவலர் ஆயர் Sergio Pagano, கூறினார்.
வத்திக்கான் இரகசிய ஆவணங்கள் காப்பகம் இவ்வாண்டு தன் 400வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதையொட்டி, வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியொன்றில் ஆயர் Pagano இவ்வாறு கூறினார்.
1611ம் ஆண்டு திருத்தந்தை ஐந்தாம் பால் அவர்களால் வத்திக்கான் இரகசிய ஆவணங்கள் காப்பகம் துவக்கப்பட்டது. 1073ம் ஆண்டு முதல் 1085ம் ஆண்டுவரை திருஅவையை வழிநடத்திய திருத்தந்தை ஏழாம் கிரகோரி அவர்கள் எழுதிய மடல்கள் இக்காப்பகத்தில் முதல் முதலாக வைக்கப்பட்டன.
1881ம் ஆண்டு முதல் திருத்தந்தை 13ம் லியோ அவர்களால் இந்த ஆவண காப்பகம் ஆய்வாளர்களின் பார்வைக்குத் திறந்து விடப்பட்டது என்று கூறிய ஆயர் Pagano, இந்த காப்பகத்தின் பெயரில் உள்ள 'இரகசிய' என்ற வார்த்தைக்கு இலத்தீன் மொழியில் 'தனிப்பட்ட' என்று பொருள். எனவே, வத்திக்கானில் உள்ள ஆவணங்கள் இரகசியமாய் வைக்கப்பட்டுள்ளன என்று தவறான கருத்து நிலவுகிறது விளக்கினார்.
இந்தக் காப்பகம் துவக்கப்பட்டபோது அங்கிருந்த ஏடுகள் 400 மீட்டர் நீளமுள்ள அலமாரிகளில் வைக்கப்பட்டிருந்தன என்று கூறிய ஆயர் Pagano, தற்போது இந்த ஏடுகள் வைக்கப்பட்டுள்ள அலமாரிகள் 85 கிலோமீட்டர்கள் அளவு நீண்டுள்ளன என்று கூறினார்.








All the contents on this site are copyrighted ©.