தென் கொரியாவில் கத்தோலிக்கர்கள் எண்ணிக்கை கூடியதற்குப் பொது நிலையினரே முக்கிய காரணம்
- வத்திக்கான் அதிகாரி
ஏப்ரல்,19,2012. தென் கொரியாவில் கத்தோலிக்கர்கள் எண்ணிக்கை கூடியதற்குப் பொது நிலையினரே
முக்கிய காரணம் என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார். 1960ம் ஆண்டில் 2 விழுக்காடு
கிறிஸ்தவர்களே வாழ்ந்து வந்த தென் கொரியாவில் தற்போது 30 விழுக்காடு கிறிஸ்தவர்கள் வாழ்கின்றனர்
என்றும், 60களில் 250 பேராக இருந்த இறைபணியாளர்களின் எண்ணிக்கை, தற்போது 5000மாக உயர்ந்துள்ளது
என்றும் அயல்நாட்டு மறைபரப்புப் பணிக்கென உருவாக்கப்பட்டுள்ள பாப்பிறை நிறுவனத்தின் தலைவர்
அருள்தந்தை Piero Gheddo, கூறினார். இத்தாலிய ஆயர் பேரவை வெளியிடும் "Avvenire" என்ற
செய்தித்தாளில் உயிர்ப்புத் திருநாளையொட்டி, வெளியான அறிக்கையில் அருள்தந்தை Gheddo இந்த
விவரங்களை வெளியிட்டுள்ளார். ஐரோப்பாவில் உள்ள கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை குறைந்து
வந்தாலும், ஆசியா, ஆப்ரிக்கா கண்டங்களில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதென்று
இவ்வறிக்கை கூறுகிறது. 20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஆப்ரிக்காவின் சகாரப் பகுதிகளில்
20 இலட்சமாக இருந்த கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை 21ம் நூற்றாண்டின் துவக்கத்தில் 13 கோடியாக
உயர்ந்துள்ளது என்று இவ்வறிக்கை கூறுகிறது.