திருத்தந்தையின் சார்பில் கிறிஸ்தவ ஆர்த்தடாக்ஸ் மற்றும் கீழைரீதி சபைகளுக்கு அனுப்பப்பட்ட
உயிர்ப்புத் திருநாள் செய்தி
ஏப்ரல்,19,2012. உலகில் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் நம்பிக்கையின் சாட்சிகளாய் விளங்குவதே
உயிர்ப்புத் திருநாளின் மையப்பொருள் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார். ஏப்ரல்
15, கடந்த ஞாயிறன்று கிறிஸ்தவ ஆர்த்தடாக்ஸ் மற்றும் கீழைரீதி சபைகள் உயிர்ப்புப் பெருவிழாவைக்
கொண்டாடியதையொட்டி, கிறிஸ்தவ ஒற்றுமையை வளர்க்கும் பாப்பிறைக் கழகம், திருத்தந்தையின்
சார்பில் அனுப்பியச் செய்தியில் இவ்வாறு கூறப்பட்டிருந்தது. அனைத்து கிறிஸ்தவர்களும்
கிறிஸ்துவின் உயிர்ப்புக்கு சாட்சிகளாய் வாழும்போது, அது உலகின் பல பகுதிகளில் வன்முறைகளால்
பாதிக்கப்பட்டுள்ள பல மக்களின் மனதில் நம்பிக்கையை வளர்க்கும் ஓர் சாட்சியாக விளங்கும்
என்று திருத்தந்தையின் செய்தி எடுத்துரைக்கிறது. மனித வாழ்வின் இறுதி உண்மை சாவும்
அழிவுமல்ல, மாறாக வாழ்வு என்பதையும், இறைவனின் அன்பு என்றும் அழியாத நிறைவுடையது என்பதையும்
உயிர்ப்பு விழா உலகிற்கு சொல்கிறது என்று திருத்தந்தை தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். கிறிஸ்தவர்கள்
உலகிற்கு நம்பிக்கை தரும் நற்செய்தியாளர்களாக வாழ அழைக்கப்பட்டுள்ளனர் என்று கூறிய திருத்தந்தை,
இந்த நம்பிக்கையை வழங்க, கிறிஸ்தவர்களிடையே இன்னும் ஆழமான ஒற்றுமை உருவாகவேண்டும் என்றும்
வலியுறுத்தியுள்ளார்.