2012-04-17 15:23:19

கவிதைக் கனவுகள் - புத்தாண்டைத் தொடர்வோம்...


தமிழ் புத்தாண்டை எப்போது கொண்டாடுவதென்று
அரசாட்சிகள் சொல்லட்டும்
தமிழ் புத்தாண்டை எப்படிக் கொண்டாடுவதென்று
மனசாட்சிகள் சொல்லட்டும்...
புத்தாண்டைக் கொண்டாட ஒரு நாள் போதாது
புத்தாண்டைத் தொடர்வோம் வாருங்கள்...

மகிழ்வாய்ப் பகிர்வோம் வாருங்கள்
பிரிவெனும் சுவர்களைத் தகர்த்தெறிந்தே
பரிவுடன் அமைப்போம் பாலங்கள்.
படைத்தநல் பரமனின் செல்வங்கள்
கரை புரண்டோடிடும் வெள்ளங்கள்
அனைத்தும் தனக்கென
அணைகள் எழுப்பிடும்
ஆசைகள் தகர்த்திடுவோம்
பாசத்தில் பகிர்ந்திடுவோம்

மேடுகள் தாழ்வுகள் சமம் செய்வோம்
ஆறுகள் ஓடைகள் பல செய்வோம்
பசுமையைப் படைத்திடுவோம் - நெஞ்ச
வறுமையைக் களை எடுப்போம்.

வந்தாரை, வறியோரை வாழவைக்கும்
வற்றாது விருந்தோம்பும் தமிழ் பண்பை
எந்நாளும் தொடர்வோம் - தமிழ் புத்தாண்டை
எந்நாளும் தொடர்வோம்








All the contents on this site are copyrighted ©.