ஏப்.12,2012. அனைத்து இராணுவத் தாக்குதல்களையும் இம்மாதம் 12ம் தேதியிலிருந்து நிறுத்திக்
கொள்வதாக, ஐ.நா. மற்றும் அரபு கூட்டமைப்பின் சிறப்புத் தூதர் கோஃபி அன்னானுக்கு, சிரியா
அரசு வழங்கிய வாக்குறுதி இவ்வியாழன் உள்ளூர் நேரம் காலை 6 மணி முதல் கடைப்பிடிக்கப்பட்டு
வருவதாக பன்னாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளன. சிரியாவில் மக்கள் குடியிருக்கும் பகுதிகளிலிருந்து
அனைத்துத் துருப்புக்களையும் இம்மாதம் 10ம் தேதிக்குள் விலக்கிக் கொள்வதாகக் கடந்த வாரத்தில்
சிரியா அரசு அன்னானிடம் கூறியது. இவ்வாறு நடைபெறும் நிலையில், அந்நாட்டில் போரிடும் அனைத்துத்
தரப்புக்களும் எல்லா வகையான வன்முறைகளையும் நிறுத்த வேண்டுமென்று அன்னான் வலியுறுத்தியிருந்தார். இவ்வியாழனன்று
சிரியா அரசு தொடங்கியுள்ள இந்தப் போர் நிறுத்தம் குறித்து சிரியா வெளியுறவு அமைச்சர்
அன்னானுக்கு எழுதிய கடிதத்தில், அப்பாவி குடிமக்கள், அரசுப் படைகள், பொது மற்றும் தனியார்
சொத்துக்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்திய பயங்கரவாதக் குழுக்கள் தாக்குதல்களை நடத்தும் போது,
அவற்றைத் தடுப்பதற்கு எவ்வித எதிர்த் தாக்குதல்களையும் நடத்துவதற்கு அரசுக்கு உரிமை உள்ளது
என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார் என்று அவ்வமைச்சகப் பேச்சாளர் அகமத் ஃபாவ்சி கூறினார். சிரியா
அரசு ஆதரவாளர்களுக்கும், எதிர்தரப்பினருக்கும் இடையே கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து
இடம் பெற்று வரும் சண்டையில் ஏறத்தாழ ஒன்பதாயிரம் பேர் இறந்துள்ளனர்.