சிரியாவில் அமைதி உருவாக இராணுவ வழிகளைச் சிந்திக்கக் கூடாது - புனித பூமியின் காவல்
பொறுப்பாளர்
ஏப்ரல்,12,2012. சிரியாவில் அமைதி உருவாக மேற்கு திசை நாடுகள் அரசியல் வழிகளைக் கடைபிடிக்க
வேண்டுமேயொழிய, இராணுவ வழிகளைச் சிந்திக்கக் கூடாது என்று புனித பூமியின் காவல் பொறுப்பில்
உள்ள அருள்தந்தை Pierbattista Pizzaballa கூறினார். மேற்கு நாடுகள் ஆப்கானிஸ்தானிலும்
ஈராக்கிலும் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டதால் அங்கு உருவான நிலையை நன்கு அறிந்துள்ள
நாம், அதே வழியில் சிரியாவிலும் இராணுவ சக்தியுடன் தீர்வு காணும் மேற்கு நாடுகளின் முயற்சிகளை
ஆதரிக்கக் கூடாது என்று பிரான்சிஸ்கன் துறவுச் சபையைச் சேர்ந்த அருள்தந்தை Pizzaballa
கூறினார். 16ம் நூற்றாண்டில் இருந்து பிரான்சிஸ்கன் துறவு சபையினர் புனித பூமியின்
கண்காணிப்பை ஏற்று பணி செய்து வருகின்றனர். இவர்களின் பணித் தளங்களாக எகிப்து, சிரியா,
லெபனான், ஜோர்டான், சைப்ரஸ் ஆகிய நாடுகள் உள்ளன. ஈராக்கில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ
ஆக்கிரமிப்பு, சிரியாவிலும் மேற்கொள்ளப்பட்டால், ஈராக்கில் கிறிஸ்தவர்கள் தொடர்ந்து வன்முறைகளுக்கு
உள்ளாவதுபோல், சிரியாவிலும் தங்கள் நிலைமை மோசமாகும் என்ற அச்சம் கிறிஸ்தவர்கள் மத்தியில்
உள்ளது என்று அருள்தந்தை Pizzaballa எடுத்துரைத்தார்.