பாகிஸ்தான் தலத் திருஅவையில் புனித வாரத் திருச்சடங்குகளின் மையப் பொருள் - குடும்பங்கள்
ஏப்ரல்,11,2012. கிறிஸ்துவ வாழ்வைப் பேணிவளர்க்கும் தொட்டிலாக விளங்குவது குடும்பங்கள்
என்பதால், புனித வாரத் திருச்சடங்குகளின் மையப் பொருளாகக் குடும்பங்கள் என்ற கருத்தையே
பாகிஸ்தான் தலத் திருஅவை வலியுறுத்தியது என்று லாகூர் அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் Sebastian
Shaw, கூறினார். குடும்பங்கள் விசுவாசத்தின் தொட்டில் என்பதாலும், இவ்வாண்டு அக்டோபர்
மாதம் முதல் நாம் விசுவாச ஆண்டைக் கொண்டாட உள்ளதாலும் குடும்பங்களை மையப்பொருளாக எடுத்துக்
கொண்டோம் என்று ஆயர் Shaw, Fides செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் கூறினார். விசுவாச
ஆண்டைச் சிறப்பிக்கும் ஒரு முயற்சியாக, கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வியை உருது
மொழியில் வெளியிட உள்ளதாகவும் ஆயர் Shaw தெரிவித்தார். பாகிஸ்தானில் சிறுபான்மையினராய்
வாழும் கிறிஸ்தவர்கள் வன்முறைகளைச் சந்தித்து வந்தாலும், உரையாடல், சமஉரிமைகள், அமைதி
ஆகியப் பண்புகளை வளர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது உற்சாகம் தரும் ஒரு விடயம்
என்றும் லாகூர் அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் Sebastian Shaw கூறினார்.