ஏப்ரல்,09,2012. பெண்கள் நம் ஆண்டவரோடு கொண்டிருந்த சிறப்பான பிணைப்பு அனுபவம், கிறிஸ்தவ
சமூகத்தின் நடைமுறை வாழ்வுக்கு முக்கியமானது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார். இயேசுவின்
உயிர்ப்பு ஞாயிறுக்கு அடுத்த இத்திங்களன்று Castel Gandolfo வில் அல்லேலூயா வாழ்த்தொலி
உரை வழங்கிய திருத்தந்தை, அக்காலத்தில் இஸ்ரேலில் பெண்களின் சாட்சியத்திற்கு அதிகாரப்பூர்வ
சட்டரீதியான மதிப்பு இல்லையெனினும், பெண்கள் நம் ஆண்டவரோடு சிறப்பான பிணைப்பை அனுபவித்தார்கள்
என்று கூறினார். உயிர்த்த இயேசு அளித்த காட்சிகளிலும், அவரின் திருப்பாடுகள் மற்றும்
மரணம் பற்றிய நிகழ்வுகளிலும் பெண்களின் பங்கு முக்கியமானதாக இருந்ததாக நற்செய்தியில்
நாம் வாசிக்கிறோம் என்றுரைத்த அவர், நம்பிக்கை மற்றும் அமைதியின் ஊற்றாகிய உயிர்த்த ஆண்டவரின்
உயிருள்ள பிரசன்னத்தை நாமும் அனுபவிக்க அன்னைமரியின் பரிந்துரையை நாடுவோம் என்றும் கூறினார். உயிர்ப்புத்
திங்கள், பல நாடுகளில் ஓய்வு மற்றும் பொழுது போக்கு நாளாக அமைந்துள்ளது, மக்கள் நகரத்
தெருக்களில் ஓய்வாக நடந்தும், நண்பர்களோடும் குடும்பங்களோடும் நேரத்தைச் செலவழித்தும்
இவ்விடுமுறை நாளைச் செலவழிக்கின்றனர், ஆயினும், நம் விசுவாசத்தின் பேருண்மையான ஆண்டவரின்
உயிர்ப்பு இவ்விடுமுறைக்கு உண்மையான காரணம் என்று கூறினார் திருத்தந்தை. நற்செய்தி
எழுத்தாளர்கள், உயிர்ப்பை விவரிக்கவில்லை, இந்த உயிர்ப்பு நிகழ்வு, நம் அறிவுக்கு எட்டாத
மறைபொருளாக, நம் கண்களால் தாங்க முடியாத ஒளியாக இருக்கின்றது என்றும் அவர் கூறினார்.
புனித மத்தேயு இந்நிகழ்வை பெரிய நிலநடுக்கமாகவும், மின்னல் போன்ற ஒளிநிறைந்த ஆண்டவரின்
தூதர் கல்லறையை மூடியிருந்த கல்லைப் புரட்டி அதன் மேல் உட்கார்ந்தார் எனவும் விவரிக்கிறார்.
பெண்கள் தூதர்களிடமிருந்து உயிர்ப்பு பற்றிய அறிவிப்பைப் பெற்ற போது, அச்சமும் பெருமகிழ்ச்சியும்
நிறைந்தவர்களாய், சீடர்களிடம் அறிவிக்க விரைந்தனர், அந்த நேரத்தில் அவர்களும் இயேசுவைச்
சந்தித்து அவரது காலடிகளில் பணிந்து அவரை வணங்கினர், இயேசுவும் அவர்களிடம், அஞ்சாதீர்கள்!
என் சகோதரர்களிடம் சென்று அவர்களைக் கலிலேயாவுக்குப் போகுமாறு சொல்லுங்கள். அங்கே அவர்கள்
என்னைக் காண்பார்கள்' என்றார் என்றும் திருத்தந்தை அல்லேலூயா வாழ்த்தொலி உரையில் கூறினார். பின்னர்
பல மொழிகளில் பயணிகளை வாழ்த்தி, அவர்களுக்குத் தனது ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை
16ம் பெனடிக்ட்.