உயிர்ப்புப் பெருவிழாவையொட்டி இந்தியப் பிரதமர் தெரிவித்த வாழ்த்துக்கள்
ஏப்ரல்,09,2012. உயிர்ப்புப் பெருவிழா கருணையையும், மனித உறவையும் வலுப்படுத்தும் ஒரு
நாள், நல்லதொரு எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையை உருவாக்கும் நாள் என்று இந்தியப் பிரதமர்
மன்மோகன் சிங் கூறினார். இஞ்ஞாயிறன்று கொண்டாடப்பட்ட உயிர்ப்புப் பெருவிழாவையொட்டி
இந்திய மக்களுக்குத் தன் வாழ்த்துக்களைத் தெரிவித்த பிரதமர் இவ்வாறு கூறினார். பொய்மையையும்,
தீமையையும் உண்மை என்றும் வெல்லும் என்பதும், வெறுப்பைவிட அன்பே உலகில் சக்திவாய்ந்தது
என்பதும் இந்த உயிர்ப்பு விழாவின் உள்ளார்ந்த அர்த்தம் என்று பிரதமர் தன் செய்தியில்
குறிப்பிட்டார். இந்த விழா இந்திய மக்களிடையே ஒற்றுமையுணர்வையும், ஒருவருக்கொருவர்
உதவும் மனப்பாங்கையும் வளர்க்க வேண்டும் என்ற தன் ஆவலையும் இந்தியப் பிரதமர் தன் செய்தியில்
வெளியிட்டுள்ளார்.