உலகெங்கும் வாழ்கின்ற கிறிஸ்தவர்களுக்கு புனித வியாழன், புனித வெள்ளி, புனித சனி, உயிர்ப்பு
ஞாயிறு ஆகிய நாள்கள் மிக மிக முக்கியமானவை. நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இம்மண்ணக
வாழ்வின் உச்சகட்ட நிகழ்வுகள் நடந்த நாள்கள் இவை. அவர் இவ்வுலகினர் எல்லாரின் மீட்புக்காகத்
தம்மையே கல்வாரி சிலுவை மரத்தில் செய்த தியாகத்தைத் தியானிக்கும் நாள்கள். இந்த நம் இயேசுவை
கடந்த ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நமக்கு நினைவுபடுத்துவது திருநற்கருணை. புனித வியாழனன்று
இயேசு தம் பன்னிரு திருத்தூதர்களுடன் எருசலேமில் பாஸ்கா உணவு அருந்தி திருநற்கருணையை
ஏற்படுத்தினார். அவர்தம் வாழ்க்கையில் நடந்த இந்த இறுதி இராவுணவின் போது, உன்னத குருவாம்
அவர் குருத்துவத்தையும் ஏற்படுத்தினார். எனவே குருத்துவமும் திருநற்கருணையும் கிறிஸ்தவர்கள்
மனதில் அழியாத நினைவுச் சின்னங்களாக அமைந்துள்ளன. புனித வியாழன் குருக்களின் நாள். அருள்பணியாளர்களின்
நாள். இந்நாளில் குருக்கள் எல்லாருக்கும் நம் நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்போம்.
இந்தப்
புனித வியாழன் பற்றிய சிந்தனைகளை வழங்குகிறார் அருட்பணி பிச்சைமுத்து, பாண்டிச்சேரி உயர்மறை
மாவட்டம். புனித வியாழன் பற்றிய
சிந்தனைகளை வழங்கியவர் அருட்பணி பிச்சைமுத்து, பாண்டிச்சேரி உயர்மறை மாவட்டம்
இயேசு
தம் திருத்தூதர்களோடு பாஸ்கா உணவை முடித்து கெத்செமனி ஒலிவத் தோட்டம் சென்று வானகத்தந்தையிடம்
செபித்தார். அங்கு அவரது எதிரிகளால் கைது செய்யப்பட்டு, மனித வார்த்தைகளால் விவரிக்க
முடியாத அளவுக்கு துன்புறுத்தப்பட்டு கொடும் பாடுகளை அனுபவித்தார். தமக்குரிய நம்மையெல்லாம்
உலகம் முடியும்வரை அன்பு செய்வதை உணர்த்துவதற்காக, இவற்றையெல்லாம் மௌனமாகத் தாங்கிக்
கொண்டார். இயேசுவின் பேரன்பை உணருவோம். அவ்வன்பில் நிலைத்திருப்போம். தாழ்மையும் அன்பும்
இணைந்துவிட்டால் தியாகமே அதன் வெளிப்பாடு.