வடகிழக்கு இந்தியாவில் புனித வார நிகழ்ச்சிகளை ஊக்கப்படுத்தும் முயற்சிகள்
ஏப்ரல்,04,2012. பழங்குடி மக்கள் மத்தியில் நடைபெறும் மோதல்களால் தொடர்ந்து பிரச்சனைகளைச்
சந்தித்து வரும் வடகிழக்கு இந்தியாவில் புனித வார நிகழ்ச்சிகளை ஊக்கப்படுத்தும் முயற்சிகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக குவஹாத்தி உயர்மறைமாவட்டத்தைச் சேர்ந்த
300க்கும் அதிகமான துறவியர் வடகிழக்கு இந்தியாவின் மலைப்பகுதிகளில் உள்ள 14 கிராமங்களில்
இப்புனித வார நிகழ்ச்சிகளை மேற்கொண்டுள்ளனர். புனித வார முயற்சிகளை இப்பகுதிகளில்
ஏற்பாடு செய்துள்ள அருள்தந்தை சாலமோன், பழங்குடி மக்கள் அடிப்படைத் தேவைகள் பலவும் இல்லாமல்
துன்புறுவதைக் காணும்போது, இவர்களது தினசரி வாழ்வே சிலுவைப்பாதையாக மாறியுள்ளது என்பதை
உணரலாம் என்று எடுத்துரைத்தார். பொதுவாக மக்கள் எளிதில் அணுகமுடியாதப் பகுதிகளில்
துறவியர் மேற்கொண்டுள்ள இந்த முயற்சிகளால் அப்பகுதி மக்களின் விசுவாச வாழ்வு தூண்டப்பட்டுள்ளது
என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.