2012-04-02 15:43:48

குருத்து ஞாயிறன்று திருத்தந்தை இளையோர்க்கு வழங்கிய மறையுரை


ஏப்ரல்,02,2012. நாசரேத்தூர் இயேசு நமக்கு யார், மெசியாவைக் குறித்தும் கடவுளைக் குறித்தும் நம் எண்ணங்கள் என்ன என்ற கேள்விகளை விசுவாசிகளுக்கு முன்வைத்து குருத்து ஞாயிறின் மறையுரையை வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
குருத்து ஞாயிறன்று திருஅவையில் சிறப்பிக்கப்படும் உலக இளையோர் தினத்தையொட்டி, உரோம் நகரின் தூய பேதுரு வளாகத்தில் அமர்ந்திருந்த பல ஆயிரக்கணக்கான இளையோர் உட்பட முப்பதாயிரத்துக்கு மேற்பட்ட விசுவாசிகளுக்குத் திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை, இறைவனை வரவேற்பதற்கும் அவர் வழியை இறுதிவரை பின்பற்றுவதற்கும் தீர்மானம் எடுக்கும் நாளாக இக்குருத்து ஞாயிறை நாம் சிறப்பிப்போம் என்று கூறினார்.
சிலுவையை மணிமுடியாக ஏற்றுக்கொண்ட நம் மன்னரின் பாதையில் நடைபோட இப்புனிதவாரத்தில் அழைக்கப்படுகிறீர்கள் என இளையோரிடம் உரைத்தத் திருத்தந்தை, நம்முடைய உண்மையான எதிர்பார்ப்புகள் என்ன, நம் ஆழமான விருப்பங்கள் என்ன என்பது குறித்து சிந்திக்க வேண்டிய நேரம் இது என்றார்.
இஸ்ரயேலின் அரசராக இயேசுவைக் கொண்டாடிய அதே மக்கள், பிலாத்தின் முன்னிலையில் இயேசுவைச் சிலுவையில் அறையும்படிக் கேட்டதைப் பற்றியும் சுட்டிக்காட்டிய பாப்பிறை, மெசியாவாகவும் இஸ்ரயேலின் மன்னராகவும் இயேசு தன்னை வெளிப்படுத்திய விதத்தால் ஏமாற்றமடைந்தவர்களே இவ்வாறு எதிர்மறையாக மாறினர் என்றார்.
இறைவனுக்கு ஆம் என்று சொல்வதற்கும் அவர் வழியைப் பின்பற்றுவதற்கும் உறுதியான தீர்மானத்தை எடுக்கும் நாளாக இக்குருத்துஞாயிறை சிறப்பிப்போம் என இளையோர்க்கு மீண்டும் அழைப்பு விடுத்த திருத்தந்தை, இத்தகையத் தீர்மானமே உண்மையான மகிழ்வுக்கு இட்டுச் செல்லும் என்பதையும் எடுத்துரைத்து 'ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்' என்ற இவ்வாண்டின் இளையோர் தின மையக்கருத்தையும் சுட்டிக்காட்டினார்.








All the contents on this site are copyrighted ©.