ஏப்ரல்,02,2012. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இஸ்பெயின் நாட்டின் மத்ரித் நகரில் இடம்பெற்ற
உலக இளையோர் தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட திருத்தந்தைக்கு நன்றி கூறும் நோக்கில்
உரோம் நகர் வந்திருந்த இஸ்பெயின் இளைஞர்களை இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்து
உரை வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். இளையோர் தினக்கொண்டாட்டங்களைத் திரு
அவையில் ஊக்குவித்த முன்னாள் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் இறந்ததன் எழாம் ஆண்டு
இத்திங்களன்று சிறப்பிக்கப்பட்டதையும் நினைவுகூர்ந்த பாப்பிறை, மத்ரித்தில் சிறப்பிக்கப்பட்ட
26வது இளைஞர் தினக்கொட்டாட்டங்களை எண்ணும்போதெல்லாம் தன் இதயம் மகிழ்வாலும் நன்றியாலும்
நிறைவதாகவும் கூறினார். இயேசு கொணர்ந்த அன்பின் அரசைக் கட்டியெழுப்ப இளையோரின் கரங்கள்
தேவைப்படுவதால் எவ்வித முன்நிபந்தனையுமின்றி திருஅவைக்கு தங்கள் ஒத்துழைப்பை இளைஞர்கள்
வழங்கவேண்டும் எனவும் தன்னைச் சந்தித்த இஸ்பானிய இளைஞர்களிடம் விண்ணப்பித்தார் திருத்தந்தை. நம்
முன்னோர்களைப்போல் நாம் ஒவ்வொருவரும் நம் உறவினர்கள், நண்பர்கள், உடன் பயில்வோர், பணிபுரிவோர்,
ஏழைகள் மற்றும் நோயாளிகளிடையே மறைப்போதகர்களாகச் செயல்படவேண்டிய அவசியத்தையும் எடுத்துரைத்தார்
திருத்தந்தை.