“அரபு வசந்தம்” சந்தர்ப்பவாதிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது – எருசலேம் முதுபெரும் தலைவர்
மார்ச்31,2012. “அரபு வசந்தம்” என அழைக்கப்படும் பல அரபு நாடுகளில் தொடங்கிய மக்கள் கிளர்ச்சிகள்,
ஆரம்பத்தில் உண்மையான மற்றும் ஆரோக்யமான இயக்கங்களாகவே இருந்தன, ஆனால் நாள்கள் செல்லச்
செல்ல அந்த இயக்கங்கள் திசை மாறி விட்டன என்று எருசலேம் இலத்தீன்ரீதி முதுபெரும் தலைவர்
Fouad Twal குறை கூறினார். இந்த இயக்கங்களில் பங்கெடுக்காதவர்களும், அவற்றினின்று
கனிகளை அறுவடை செய்ய விரும்புவதே, இப்போது நடைபெற்று வருகின்றது என்றும் கூறினார் அவர்.
பல அரபு நாடுகளில் எழும்பிய கிளர்ச்சிகளின் பயனாக, இசுலாமிய தீவிரவாதிகள் அதிகாரத்தைக்
கையில் எடுத்துள்ளார்கள், சமய சுதந்திரம் குன்றி வருகிறது, கிறிஸ்தவர்கள் பயந்து கொண்டு
வாழ்கிறார்கள் என்றும் முதுபெரும் தலைவர் Twal தெரிவித்தார். அரபு உலகின் முன்னேற்றங்கள்
குறித்து கத்தோலிக்க ஊடகம் ஒன்றுக்கு அளித்த விரிவான நேர்காணலில் இவ்வாறு கூறிய முதுபெரும்
தலைவர் Twal, இந்த அரபு எழுச்சிகளில் மேற்கத்திய உலகின் கொள்கைகள் குறித்தும் கேள்வி
எழுப்பியுள்ளார். லிபியாவில் மேற்கத்திய இராணுவத் தலையீடு குறித்து விமர்சித்த அவர்,
கடாஃபி “மோசமானவர்” என்று உணருவதற்கு, இந்நாடுகளுக்கு 43 ஆண்டுகள் எப்படித் தேவைப்பட்டன
என்று நானே எனக்கு கேள்வி கேட்டுள்ளேன் என்றும் குறிப்பிட்டார்.