நிதி நெருக்கடி, அறநெறி நெருக்கடியில் ஆணிவேர்களைக் கொண்டுள்ளது - வத்திக்கான்-யூதமத
உரையாடல் குழு
மார்ச்31,2012. உலகில் நீதி நிறைந்த பொருளாதார அமைப்பைக் கொண்டு வருவதற்கு, மிதமான போக்கு,
நேர்மை, உலகின் வளங்கள் நியாயமாகப் பங்கிடப்படல் ஆகியவை முக்கியமான கூறுகள் என்று திருப்பீட-யூதமத
உரையாடல் பணிக்குழு கூறியது. இஸ்ரேல் யூதமத முதன்மைக் குருவின் பிரதிநிதிகளும், திருப்பீட
யூதமத உறவுகள் பணிக்குழுவின் பிரதிநிதிகளும் உரோமையில் நடத்திய மூன்று நாள்கள் கூட்டத்தின்
இறுதியில் வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. தீர்மானங்கள் எடுக்கும்
வழிமுறைகளில் ஒழுக்கநெறி ஆலோசகர்களாக, தேசிய மற்றும் சர்வதேசத் தலைவர்களும், கொள்கை அமைப்பாளர்களும்
மாற வேண்டுமெனவும் இவ்வறிக்கை வலியுறுத்துகிறது. அண்மையில் உலகில் ஏற்பட்டுள்ள பொருளாதார
நெருக்கடி, அறநெறி விழுமியங்களின் நெருக்கடி என்றும், இது பேராசை கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கின்றது
என்றும் இவ்வறிக்கை தெரிவிக்கிறது.