2012-03-30 14:39:16

சமய வாழ்விலிருந்து தொழிலைப் பிரித்துப் பார்க்கும் போக்கு அதிகரித்து வருகிறது – கர்தினால் டர்க்சன்


மார்ச்30,2012. தங்களது மத நம்பிக்கையிலிருந்து தொழிலைப் பிரித்துப் பார்க்கும் போக்கு, இக்காலத்தில் பொதுவான நோயாக, பல மக்களை, குறிப்பாக தொழிலதிபர்களைத் தாக்கியுள்ளது என்று கர்தினால் பீட்டர் டர்க்சன் கூறினார்.
UNIAPAC என்ற அனைத்துலக கிறிஸ்தவத் தொழிலதிபர்கள் கழகத்தின் 24 வது உலக மாநாட்டில் இவ்வெள்ளியன்று உரையாற்றிய, திருப்பீட நீதி மற்றும் அமைதி அவைத் தலைவர் கர்தினால் டர்க்சன், இந்நவீன காலத்தில் காணப்படும் இப்போக்கானது, வாழ்வைப் பிளவுபடுத்துகின்றது என்று கூறினார்
பிரான்சில் நடைபெற்று வரும் இம்மாநாட்டில் கலந்து கொள்ளும் இரண்டாயிரம் கிறிஸ்தவத் தொழிலதிபர்களுக்கு உரையாற்றிய கர்தினால் டர்க்சன், இவர்கள் தங்களது வேலையைப் பொது மக்களுக்குப் பயன்தரும் வகையில் செய்வதற்குத் திருஅவை உதவ விரும்புகிறது என்று கூறினார்.
திருஅவையின் சமூகக் கோட்பாடுகளின் அடிப்படையில் இந்த உதவியைச் செய்ய விரும்புகின்றது என்றார் கர்தினால் டர்க்சன்.
கிறிஸ்தவச் சமூகப் போதனைகளின் ஒளியில் உலகினருக்கு உதவும் நோக்கத்தில், ஐரோப்பிய கத்தோலிக்கத் தொழிலதிபர்களால் 1931ம் ஆண்டு உருவாக்கப்பட்டது UNIAPAC கழகம். இதற்குத் தற்போது ஆசியாவிலும் ஆப்ரிக்காவிலும் உறுப்பினர்கள் உள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.