பாகிஸ்தான் அரசின் மிக உயர்ந்த விருது இரு கத்தோலிக்கத் துறவியருக்கு வழங்கப்பட்டது
மார்ச்,28,2012. பாகிஸ்தான் அரசு தன் நாட்டு மக்களுக்கு வழங்கக்கூடிய மிக உயர்ந்த விருதுக்கு
இரு கத்தோலிக்கத் துறவியரைத் தெரிவு செய்ததற்காக தலத் திருஅவை தன் மகிழ்வையும் நன்றியையும்
தெரிவித்தது. Sitara-e-Quaid-e-Azam என்று வழங்கப்படும் இந்த உயர்ந்த விருது, இவ்வாண்டு
27 பேருக்கு வழங்கப்பட்டது. அவர்களில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அருள்தந்தை Robert McCullochம்,
அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த அருள் சகோதரி John Berkmans Conwayம் இவ்விருதைப் பெற்றுள்ளனர். கடந்த
30 ஆண்டுகளுக்கும் மேலாக பாகிஸ்தானில் உழைத்துவரும் அருள்தந்தை McCulloch, குணப்படுத்த
முடியாத நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்வதிலும், ஏழைச்
சிறுவருக்கு பள்ளியொன்றை நடத்துவதிலும் ஈடுபட்டிருந்தார். 81 வயதான அருள் சகோதரி Conway,
கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக பாகிஸ்தானில் கல்விப் பணியில் முழு மூச்சுடன் ஈடுபட்டவர்.
பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமரான Benazir Bhutto, மற்றும் மனித உரிமை ஆர்வலர் Asma Jahangir
உட்பட, பாகிஸ்தானில் உள்ள பல பெருமைக்குரியப் பெண்களுக்கு அருள்சகோதரி Conway ஆசிரியராகப்
பணியாற்றியுள்ளார்.