தமிழகத்தில், கழிவறை வசதி பெற்றிருப்போரை விட, அலைபேசி
வைத்திருப்போரின் எண்ணிக்கை அதிகம்
மார்ச்,28,2012. தமிழகத்தில், கடந்த 10 ஆண்டுகளில், கழிவறை வசதி பெற்றிருப்போரை விட,
அலைபேசி வைத்திருப்போரின் வளர்ச்சி விகிதம், பெருமளவு உயர்ந்துள்ளது. மேலும், "டிவி'
மற்றும் சமையல் எரிவாயு இணைப்புகளின் எண்ணிக்கை அதிரடியாக அதிகரித்துள்ளது. கடந்தாண்டு,
15வது மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி, நாடு முழுவதும் நடந்தது. இப்பணிக்கு அடித்தளமாக,
கடந்த 2010, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில், "வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்பு' பணி நடந்தது.
தமிழகத்தில், 1.85 கோடி வீடுகளில், இப்பணி மேற்கொள்ளப் பட்டது. இதில், குடிநீர், மின்சாரம்,
சமையல் எரிவாயு இணைப்பு, கழிவறை, குளியலறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் ரேடியோ,
"டிவி', தொலைபேசி, கம்ப்யூட்டர், வாகனங்கள் தொடர்பாக, கேள்விகள் கேட்கப்பட்டன. இவற்றுக்கு
பொதுமக்கள் அளித்த பதில்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட, "வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்பு'
என்ற நூல் இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டது. இந்நூலில், தமிழக அளவில், பின்வரும் சில
அம்சங்கள் இடம்பெற்றுள்ளன:
தமிழகத்தில், மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை,
1.42 கோடியிலிருந்து, 1.85 கோடியாக உயர்ந்துள்ளது. இவர்களில், 80 விழுக்காட்டினர்,
குழாய் இணைப்புகளின் மூலம், குடிநீர் வசதி பெற்றுள்ளனர். மீதமுள்ள 20 விழுக்காட்டினர்,
கிணறு, ஆழ்துளை கிணறு, ஆகியவற்றின் மூலம் குடிநீர் வசதி பெறுகின்றனர். கடந்த 2001ம்
ஆண்டில், 43.7 விழுக்காடாக இருந்த, ரேடியோ மற்றும் டிரான்சிஸ்டர் பயன்பாடு தற்போது, 22.7
விழுக்காடாகக் குறைந்துள்ளது. 50 விழுக்காடு வீடுகளில் தான், முறையான கழிவுநீர் வெளியேற்றும்
வசதி உள்ளது.