2012-03-26 16:50:29

செபிக்கவும் தூய்மையான இதயத்தைக் கொண்டிருக்கவும் மெக்சிகோ மக்களுக்குத் திருத்தந்தை அழைப்பு


மார்ச்26,2012. நம் ஆண்டவர் இயேசுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு ஆகிய மாபெரும் மறைபொருளை வரும் வாரத்தில் சிறப்பிப்பதற்கு நம்மையே நாம் தயாரித்து வரும் இவ்வேளையில், இறைவா, தூயதோர் இதயத்தை எம்மில் உருவாக்கும் என்று பதிலுரைப் பாடலில் செபித்தோம். நமது இதயத்தை ஆழமாக நோக்குவதற்கும், குறிப்பாக, மெக்சிகோ மற்றும் இலத்தீன் அமெரிக்க மக்கள் துன்பங்களையும் அதேசமயம், நம்பிக்கையையும் எதிர்நோக்கி வரும் இக்காலத்தில் இச்செபம் மிகவும் உதவியாக இருக்கின்றது. தூய்மையான, புதிய இதயம், தனது சக்தியின்மையை ஏற்று, இறைவனின் வாக்குறுதிகளில் நம்பிக்கை நம்பிக்கை வைத்து, அவரது கரங்களில் தன்னையே அர்ப்பணிக்கிறது. இதற்குச் சுயபரிசோதனை தேவை. மீட்பு வரலாறு முழுவதும், குறிப்பாக, இஸ்ரயேலின் விவிலிய வரலாறு முழுவதும் இது தெளிவாகத் தெரிகிறது. இஸ்ரயேலின் வரலாறு சில பெரும் நிகழ்வுகளோடும் போர்களோடும் தொடர்பு கொண்டவை. ஆனால் அது தனது வாழ்வையும், தனது இறுதிக் கதியையும், தனது மீட்பையும் குறித்த விவகாரங்களை எதிர்கொண்ட போது, அது தனது நம்பிக்கையை, தனது முயற்சிகளில் வைக்காமல், கடவுளில் வைத்தது. கடவுளே உணர்ச்சியுள்ள, புதிய இதயத்தை உருவாக்குபவர் என்று நம்பியது. நாமும் நமது தனிப்பட்ட மற்றும் சமுதாய வாழ்க்கையின் ஆழமான கூறுகள் பற்றிப் பேசும் போது, மனித யுக்திகள் நம்மை மீட்க முடியாது என்பதை, மீட்பு வரலாற்றின் இந்தப் போக்கு நம் ஒவ்வொருவருக்கும் நினைவுபடுத்துகின்றது. கடவுள் ஒருவரால் மட்டுமே மனித சமுதாயத்தை மீட்க முடியும். வாழ்வை அதன் முழுமைத் தன்மையோடு தரவல்லவர் அவர் ஒருவரே என்று அவரிடம் சரணடைய வேண்டும். ஏனெனில் அவரே வாழ்வின் ஆதாரம், அவரே வாழ்வை உருவாக்கியவர். அவரது மகன் இயேசு கிறிஸ்து வழியாக அவ்வாழ்வில் நம்மைப் பங்குதாரர்களாக ஆக்கியுள்ளார் என்றார் திருத்தந்தை.
இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை, அன்புச் சகோதர சகோதரிகளே, நான் இங்கு வந்துள்ளதால் Cubilete மலை உச்சியிலுள்ள கிறிஸ்து அரசர் நினைவுச் சின்னத்தைப் பார்க்க முடிந்தது. அருளாளர் திருத்தந்தை 2ம் ஜான் பால் மெக்சிகோவுக்கு பலதடவைகள் (5-ஐந்து) திருப்பயணம் மேற்கொண்டிருந்தாலும், Guanajuato வுக்கு வர அவர் ஆசைப்பட்டிருந்தாலும் அவரால் வர முடியவில்லை. நான் இங்கு வருவதற்கு இறைவன் வரம் அருளியதை நினைத்து அவர் விண்ணக்ததிலிருந்து மகிழ்வார். இன்னும், அவரது திருப்பண்டங்களை நாடெங்கும் வைத்து வணக்கம் செலுத்தும் இலட்சக்கணக்கான மெக்சிகோ மக்களை ஆசீர்வதிக்கிறார் என்று நம்புகிறேன் என்று சொல்லி மேலும் தொடர்ந்தார்.
இந்தக் கிறிஸ்து அரசர் நினைவுச் சின்னத்தின் மகுடங்களில் ஒன்று இறையாண்மையைக் குறிப்பதாயும் மற்றொன்று முட்களாலும் உள்ளன. இவரது இறையாட்சி பலரால் புரிந்து கொள்ளப்பட்டது போன்றது அல்ல என்பதை இந்தக் மகுடங்கள் எடுத்துக்காட்டுகின்றன. கிறிஸ்துவின் ஆட்சி, பலத்தால் அல்லது வன்முறையால் அடக்கி ஆளும் படைபலத்தால் ஆனது அல்ல. ஆனால், அது மனித இதயங்களை வெற்றி கொள்ளும் மேலான சக்தியால் ஆனது. அவரது ஆட்சி, அவர், தமது தியாகத்தால் இவ்வுலகிற்கு கொண்டு வந்த இறையன்பாலும், தான் சான்று பகரும் உண்மையாலும் ஆனது. இறைவனின் வல்லமை நன்மைத்தனத்தின் மற்றும் அன்பின் வல்லமை. இந்த அவரது இறையாண்மையை யாரும் அவரிடமிருந்து பறித்துவிட முடியாது. அதை யாராலும் மறக்கவும் முடியாது. எனவே கிறிஸ்து நமது இதயங்களில் ஆட்சி செய்வதற்கு, நமது இதயங்களைத் தூய்மையானதாகவும், பணிவானதாகவும், நம்பிக்கை நிறைந்ததாகவும், அடக்கத்துடன்கூடிய துணிவு கொண்டதாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்ட திருத்தந்தை, இலத்தீன் அமெரிக்க ஆயர்கள் 2007ம் ஆண்டில் வெளியிட்ட, புதுப்பித்தல் மற்றும் நற்செய்திப்பணி குறித்த இலத்தீன் அமெரிக்க Aparecida ஏடு பற்றியும் குறிப்பிட்டார். அன்னைமரியின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி, இறைவார்த்தைக்கு மிகுந்த கவனம் செலுத்தி, நம் இதயங்களில் தியானித்து, அன்றாட வாழ்வில் அவை கொடுக்கும் சவால்களுக்கு நம்மை அனுமதிப்பதை இப்பணி உள்ளடக்கியுள்ளது. இவ்வாறு மேலோட்டமான விசுவாச வாழ்வின் சோதனைகளை சமூகங்கள் வெற்றி கொள்ள முடியும் என்றார். இதன் மூலம் கிறிஸ்துவை அறிவதிலும், அவரின் திருஅவையைச் சார்ந்து இருப்பதிலும், கிறிஸ்தவர்களாய் இருப்பதிலும் இருக்கும் ஆழமான மகிழ்வை மீண்டும் கண்டுணர வேண்டும். புனித கன்னிமரியா நம் இதயங்களைத் தூய்மையாக வைப்பதற்கு உதவுவாராக என்று சொல்லி இம்மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.








All the contents on this site are copyrighted ©.