பற்றுறுதி, நம்பிக்கை, அன்பு ஆகியவற்றின் திருப்பயணியாக வந்துள்ளேன் – மெக்சிகோவில் திருத்தந்தை
மார்ச்24,2012. “மெக்சிகோவுக்கு வந்திருப்பதில் எனக்குப் பெருமகிழ்ச்சி. மெக்சிகோவும்
பெரும்பாலான இலத்தீன் அமெரிக்க நாடுகளும் அண்மை ஆண்டுகளாக தாங்கள் சுதந்திரம் பெற்றதன்
200வது ஆண்டைக் கொண்டாடி வருகின்றன. பல்வேறு நன்றித் திருவழிபாடுகளும் இடம் பெற்றன. பற்றுறுதி,
நம்பிக்கை, அன்பு ஆகியவற்றின் திருப்பயணியாக வந்துள்ளேன் என்று மெக்சிகோ நாட்டுக்கான
முதல் உரையில் கூறினார். Guanajuato பன்னாட்டு விமானநிலையத்தில் இடம் பெற்ற சிவப்புக்கம்பள
வரவேற்பின் போது ஆற்றிய உரையில் இவ்வாறு கூறிய திருத்தந்தை, இயேசு கிறிஸ்துவை விசுவசிப்பவர்களை,
அதில் உறுதிப்படுத்தி ஊக்கப்படுத்த விரும்புகிறேன். மதிப்பும் அமைதியும் கலந்த ஒருங்கிணைந்த
நல்வாழ்வுக்கு உதவும் நோக்கத்தில், மெக்சிகோ கத்தோலிக்கர்கள் வேதபோதக மறைப்பணியாளர்களாகச்
செயல்பட வேண்டும். ஒவ்வொரு மனிதனின் ஒப்பிடப்பட முடியாத மற்றும் இதனைப் புறக்கணிக்க எவருக்கும்
உரிமையில்லாத மாண்பிலிருந்தும் இந்த ஒருங்கிணைந்த வாழ்வு பிறக்கின்றது. இந்த மாண்பு,
மத சுதந்திரத்திற்குரிய அடிப்படை உரிமையில் குறிப்பாக வெளிப்படுத்தப்பட வேண்டும். நல்லதோர்
உலகை அமைப்பதற்குத் தங்களைச் செயல்ரீதியாக அர்ப்பணிப்பதற்கு, மெக்சிகோ மற்றும் இலத்தீன்
அமெரிக்க மக்கள் தங்களது நம்பிக்கையை இறைவனில் வைக்க வேண்டுமென, நம்பிக்கையின் திருப்பயணியாக
வந்துள்ள நான் கேட்டுக் கொள்கிறேன் என்றார். மேலும், தேவையில் இருப்போர், குறிப்பாக,
அனைத்து வகையான வன்முறைகளாலும் பழைய புதிய பகைமைகளாலும் வெறுப்புக்களாலும் துன்புறுவோருக்காகச்
சிறப்பாகச் செபித்த திருத்தந்தை, விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற மெக்சிகோவில், தானும்
அப்பண்பை உணர்வதாகத் தெரிவித்தார். அதேசமயம், இந்நாட்டில் எவரும் வரவேற்கப்படாமல் இருப்பதாக
உணரக்கூடாது. இந்த மாபெரும் நாட்டிற்கு வரவேண்டுமென்ற எனது நீண்டகால ஆவலை நிறைவேற்றிய
இறைவனுக்கு நன்றி. தங்களது தாயகத்தைவிட்டுத் தொலைவில் வாழ்வோரும், இந்நாடு நல்லிணக்கத்திலும்
உண்மையான ஒருங்கிணைந்த வளர்ச்சியிலும் வளர்வதைப் பார்க்க வேண்டுமென்ற ஆசையில் ஆர்வம்
இழக்கக்கூடாது. இந்நாட்டு மக்கள் தாங்கள் பெற்ற விசுவாசத்திற்கு எப்போதும் உண்மையுள்ளவர்களாக
வாழ அன்னைமரியிடம் செபித்து இம்முதல் உரையை நிறைவு செய்தார்.