பிலிப்பின்ஸ் தலைநகர் மணிலாவில் உலகத் திருச்சபைகளின் அவை ஏற்பாடு செய்துள்ள மாநாடு
மார்ச்,23,2012. போட்டிகள், பிரிவுகள் பெருகியுள்ள உலகில் கிறிஸ்துவை மையமாக்கி எவ்வாறு
ஒன்றிணைந்து உழைக்க முடியும் என்பதைத் தேடவே கிறிஸ்தவ சபைகள் கூடி வந்துள்ளன என்று மணிலாவின்
பேராயர் Luis Antonio Tagle கூறினார். இவ்வியாழனன்று பிலிப்பின்ஸ் தலைநகர் மணிலாவில்
உலகத் திருச்சபைகளின் அவை ஏற்பாடு செய்துள்ள ஒரு மாநாட்டில் கலந்து கொண்ட 400க்கும் அதிகமான
உறுப்பினர்களிடம் பேசிய மணிலா பேராயர் Tagle இவ்வாறு கூறினார். மார்ச் 27ம் தேதி வரை
நடைபெறும் இந்த மாநாட்டின் முடிவில் நற்செய்தி பரப்புப் பணியில் உலகக் கிறிஸ்தவ சபைகள்
எதிர்கொள்ளும் சவால்கள் தீர ஆய்வு செய்யப்படும் என்றும் எதிர்காலத்திற்குத் தேவையான முடிவுகள்
எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. உலகத் திருச்சபைகளின் அவை என்ற இந்த
அமைப்பில் 349 கிறிஸ்தவ சபைகள் உறுப்பினர்களாக உள்ளன. உலகெங்கும் பரவியுள்ள 56 கோடி கிறிஸ்தவர்களின்
ஒற்றுமைக்காக இந்த அமைப்பு உழைத்து வருகிறது என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.