2012-03-23 15:12:21

கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்திற்கு வெளிநாட்டிலிருந்து பெற்ற பணத்தைப் பயன்படுத்தியதற்கு எந்த வித ஆதாரமும் இல்லை


மார்ச்,23,2012. கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்திற்கு, அரசுசாரா அமைப்புக்கள் வெளிநாட்டிலிருந்து பெற்ற பணத்தைப் பயன்படுத்தின என்பதற்கு எந்த வித ஆதாரமும் இல்லை என்று இந்திய அரசின் அமைச்சர் ஒருவர் கூறினார்.
கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டம், கடந்த சில மாதங்களாக தீவிரமாக நடந்து வரும் சூழலில், தூத்துக்குடி மறைமாவட்ட சமூகப்பணிக் குழுவின் வங்கிக் கணக்குகளையும், வேறு சில அரசுசாரா அமைப்புக்களின் வங்கிக் கணக்குகளையும் இந்திய அரசு முடக்கி வைத்துள்ளது.
இந்தச் சமுதாய நல அமைப்புக்கள், வெளிநாட்டிலிருந்து பெற்ற பணத்தை கூடங்குளம் எதிர்ப்புப் போராட்டத்திற்குப் பயன்படுத்தினர் என்ற சந்தேகத்தின் பேரில் இந்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.
இது குறித்து, பிரதமர் அலுவலகப் பணிகளின் மத்திய இணை அமைச்சராக இருக்கும் வி நாராயணசாமி, மேலவையில் இவ்வியாழனன்று பேசியபோது இவ்வாறு கூறினார்.
அரசுசாரா அமைப்புக்கள் என்று பொதுவில் குறிப்பிட்டுப் பேசிய அமைச்சர், இது குறித்த முழு விசாரணை முடியும் வரை இவ்வமைப்புக்களின் பெயர்களை வெளியிடப்போவதில்லை என்பதையும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.