2012-03-21 15:01:38

"புறவினத்தார் முற்றம்" என்ற உரையாடல் முயற்சி இத்தாலியின் பலெர்மோ நகரில் மார்ச் மாதம் 29, 30 தேதிகளில் நடைபெறும்


மார்ச்,21,2012. பாப்பிறைக் கலாச்சாரக் கழகம் "புறவினத்தார் முற்றம்" ("Courtyard of the Gentiles") என்ற பெயரில் நிகழ்த்தி வரும் ஓர் உரையாடல் முயற்சி, இம்முறை இத்தாலியின் பலெர்மோ நகரில் மார்ச் மாதம் 29 மற்றும் 30 தேதிகளில் நடைபெறும் என்று வத்திக்கான் அறிவித்துள்ளது.
பாப்பிறைக் கலாச்சாரக் கழகத்தின் தலைவர் கர்தினால் Gianfranco Ravasi, இந்நிகழ்வைக் குறித்து இச்செவ்வாயன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கலாச்சாரங்கள் மற்றும் மதங்கள் இடையே உரையாடலை வளர்க்கும் ஒரு முயற்சியாக, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் தூண்டுதலால் பாப்பிறை கலாச்சாரக் கழகம் மேற்கொண்டு வரும் இம்முயற்சி இதுவரை Bologna, Paris, Bucharest, Florence, Rome, Tirana, ஆகிய நகரங்களில் நடத்தப்பட்டுள்ளது.
இம்மாத இறுதியில் Sicilyயின் பலெர்மோ நகரில் நடைபெற உள்ள 'புறவினத்தார் முற்றம்' கூட்டத்தில், திட்டமிட்டு நடைபெறும் குற்றங்கள் கலாச்சாரத்திற்கு ஒரு சவாலாக இருக்கின்றது என்பது பற்றி விவாதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
'சட்டங்கள் வழி அமைக்கப்பட்டுள்ள கலாச்சாரம் மற்றும் பல்சமயச் சமுதாயம்' என்ற தலைப்பில் நடைபெற உள்ள இவ்வாண்டு கூட்டத்தில், பல்கலைக் கழக மாணவ, மாணவியருக்கும் சிறப்பு அமர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.