அயர்லாந்து திருஅவையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் முடிவுகளும், பரிந்துரைகளும்
மார்ச்,21,2012. திருத்தந்தை அறிவித்துள்ள 'விசுவாச ஆண்டு' மற்றும் 50வது அகில உலக திருநற்கருணை
மாநாடு ஆகியவற்றைச் சிறப்பிக்க அயர்லாந்து தன்னையே தயாரித்து வருகிறது என்று கர்தினால்
Sean Brady கூறினார். அயர்லாந்து குருக்களில் சிலர் பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டனர்
என்ற குற்றச்சாட்டை அடுத்து, திருத்தந்தையால் விசாரணைக் குழு ஒன்று அந்நாட்டிற்கு அனுப்பப்பட்டிருந்தது.
இக்குழுவினர் அயர்லாந்து திருஅவையில் மேற்கொண்ட விசாரணைகளின் முடிவுகளையும், பரிந்துரைகளையும்
திருப்பீடம் இச்செவ்வாயன்று வெளியிட்டது. திருப்பீடத்தின் இந்த முயற்சிக்குத் தன்
நன்றியைத் தெரிவித்த அயர்லாந்து ஆயர் பேரவையின் தலைவரான கர்தினால் Brady, குருக்களின்
குற்றங்களால் பாதிக்கப்பட்டோர் மீது திருத்தந்தை காட்டிவரும் தனிப்பட்ட அக்கறை இந்த முயற்சியால்
பெரிதும் வெளியாகிறது என்று கூறினார். விரைவான சமுதாய மற்றும் கலாச்சார மாற்றங்களைக்
கண்டு வரும் அயர்லாந்தில் திருஅவையும் மாற்றங்களைக் கொணர வேண்டும் என்ற உந்துதலை திருப்பீடத்தின்
அறிக்கை இந்நாட்டிற்குத் தந்துள்ளது என்று கூறிய கர்தினால் Brady, விசாரணைக் குழு வெளியிட்டுள்ள
பரிந்துரைகளையும் விளக்கினார்.