மெக்சிகோ மற்றும் கியூபாவுக்கானத் திருப்பயணத்திற்காகச் செபிக்குமாறு திருத்தந்தை
அழைப்பு
மார்ச்19,2012. இவ்வாரத்தில் மெக்சிகோ மற்றும் கியூபாவுக்குத் தான் மேற்கொள்ளவிருக்கும்
திருப்பயணத்திற்காகச் செபிக்குமாறு இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் விசுவாசிகளைக்
கேட்டுக் கொண்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். இந்நாடுகளிலும், இலத்தீன் அமெரிக்கா
முழுவதிலுமுள்ள கிறிஸ்தவர்களை விசுவாசத்தில் உறுதிப்படுத்தவும், மெக்சிகோவிலும் கியூபாவிலும்
இடம் பெறும் விசுவாசப் பதுப்பித்தலுக்கு உந்துதல் கொடுக்கவும் அந்நாடுகளுக்குச் செல்வதாகத்
தெரிவித்தார் திருத்தந்தை. 85 வயதை விரைவில் அடையவிருக்கும் திருத்தந்தையின் இத்திருப்பயணத்தை
முன்னிட்டு இவ்வாரப் புதன் பொது மறைபோதகம் இடம் பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,
மெக்சிகோவில் திருத்தந்தை திருப்பயணம் மேற்கொள்ளும் நாட்களில் வன்முறைகளை நிறுத்திக்
கொள்வதாக அந்நாட்டின் போதைப்பொருள் வியாபாரக் கும்பல் ஒன்று விளம்பரங்களை நகரத் தெருக்களில்
ஒட்டியுள்ளதாக ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது. மெக்சிகோ மற்றும் கியூபாவுக்கானத் திருத்தந்தையின்
திருப்பயணம் இம்மாதம் 23 முதல் 28 வரை நடைபெறும்.