இலங்கைக்கு எதிரானஅமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கலாம்-மன்மோகன் சிங்
மார்ச்,19,2012. ஐ.நா. அவையின் மனித உரிமைகள் குழுக் கூட்டத்தில், இலங்கைக்கு எதிராக
அமெரிக்கா முன்மொழிந்துள்ள தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கக்கூடும் என்று
பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அமெரிக்கா கொண்டுவந்துள்ள
இத்தீர்மானம், இலங்கையிலுள்ள தமிழர்களின் எதிர்கால நலன்களைப் பிரதிபலிக்குமாயின் அத்தீர்மானத்துக்கு
ஆதரவாக இந்தியா வாக்களிக்க இசைந்துள்ளது என்று இந்தியப் பிரதமர் கூறியுள்ளார். சமத்துவத்துடன்
கூடிய கண்ணியமான ஓர் எதிர்காலம் இலங்கைத் தமிழர்களுக்கு கிடைக்க வேண்டும் எனும் இந்திய
இலட்சியங்களை அமெரிக்கத் தீர்மானம் சாதிக்குமானால், அதற்கு இந்தியா ஆதரவாக வாக்களிக்க
தயாராக உள்ளது என்றும் கூறிய் அவர், இலங்கையில் தமிழர்களுக்கு நீதியும் சுயகௌரவமும் கிடைக்க
வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளார். குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவித்து
உரையாற்றும் போதே இந்தியப் பிரதமர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். இலங்கைத் தமிழர்களின்
நலன்களுக்கு இந்திய அரசு அதிக முக்கியத்துவத்தை அளிக்கிறது எனவும் பிரதமர் மன்மோகன் சிங்
கூறியுள்ளார்.