மனிதாபிமானப் பணிகள் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு முன்னெடுப்பு – சிரியத் திருப்பீடத் தூதர்
மார்ச்17,2012. வன்முறைகள் நிறைந்துள்ள சிரியாவுக்கு மனிதாபிமானப் பணிகள் தொடங்கப்படவிருப்பதை
ஓர் ஆசீர்வாதமாகக் கருதுவதாக அந்நாட்டுக்கானத் திருப்பீடத் தூதர் பேராயர் மாரியோ ஜெனாரி
தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் நிறுவனம், சிரிய அரசு, இசுலாமிய பொருளாதார ஒத்துழைப்பு
நிறுவனம் ஆகிய மூன்றும் இணைந்து சிரியாவுக்கு மனிதாபிமானப் பணிகளைத் தொடங்குவதற்கு முயற்சி
செய்து வருவது குறித்து ஃபீதெஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய பேராயர் ஜெனாரி இவ்வாறு தெரிவித்தார். இந்த
நிறுவனங்களின் முயற்சி குறித்த விவரங்கள் தெரியவில்லையெனினும், இத்தகைய முயற்சிக்காகத்
தாங்கள் நீண்ட காலமாகக் காத்திருந்ததாகக் குறிப்பிட்டார் பேராயர் ஜெனாரி. கடந்த 12
மாதங்களாக நடைபெற்று வரும் தாக்குதல்களில் மக்கள் சோர்ந்து போயுள்ளார்கள் என்று அவர்
மேலும் கூறினார். இதற்கிடையே, சிரியாவில் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த
முன்னாள் ஐ.நா.பொதுச் செயலர் Kofi Annan, சிரிய அரசுத்தலைவரிடம் தான் முன்வைத்த பரிந்துரைகள்
குறித்து மேலும் கலந்து பேசுவதற்கென ஒரு குழுவை அந்நாட்டிற்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளதாக
நிருபர்களிடம் தெரிவித்துள்ளார். சிரியாவில் இதுவரை எட்டாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள்
கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐ.நா. கணக்கிட்டுள்ளது.