சவுதி அரேபியாவில் வீட்டுவேலை செய்யும் பிலிப்பீன்ஸ் நாட்டவரில் 70 விழுக்காட்டினர் உடல்
மற்றும் மன ரீதியான வன்முறைகளால் துன்புறுகின்றனர் – ஓர் ஆய்வு
மார்ச்17,2012. அரபு நாடுகளில், குறிப்பாக சவுதி அரேபியாவில் வீட்டுவேலை செய்யும் பிலிப்பீன்ஸ்
நாட்டவரில் 70 விழுக்காட்டினர் உடல் மற்றும் மன ரீதியான வன்முறைகளால் துன்புறுகின்றனர்
என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. வேலைக்கு அமர்த்தும் தலைவர்களால் குறைந்த ஊதியம்,
தவறாகப் பயன்படுத்தப்படல் போன்ற துன்பங்களை எதிர்நோக்குகின்றனர் எனவும், எந்தவிதமான வேலைக்கும்
சான்றிதழ் இல்லாமல் இருப்பவர்களும் குடும்பங்களைக் கண்காணிப்பவர்களும் உடல் மற்றும் மன
ரீதியான வன்முறைகளால் தொடர்ந்து துன்புறுகின்றனர் எனவும் வெளிநாட்டுப் பணியாளர்கள் நலவாழ்வுக்
குழு எடுத்த ஆய்வு கூறுகிறது. சவுதி அரேபியாவில் வேலை செய்யும் ஒரு கோடிக்கு மேற்பட்ட
வெளிநாட்டவரில், இந்தியா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக எண்ணிக்கையில் அதிகம் இருப்பவர்கள்
பிலிப்பீன்ஸ் நாட்டவர் என்று புள்ளி விபரங்கள் கூறுகின்றன. 2008ம் ஆண்டில் மட்டும்
6 இலட்சத்துக்கு மேற்பட்ட பிலிப்பீன்ஸ் நாட்டவர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலை தேடிச்
சென்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது.