'போர் முடிந்த பின்னரும் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்கின்றன'
– அம்னஸ்டி அறிக்கை
மார்ச்,14,2012. இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் முடிந்து மூன்று வருடங்கள்
கடந்துவிட்ட போதிலும், அங்கு இன்னமும் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன என்பதற்கான
ஆதாரங்கள் இருப்பதாக அம்னஸ்டி இண்டர்நாஷனல் அமைப்பு கூறியுள்ளது. இலங்கைப் போரின்
இறுதி நிகழ்வுகள் குறித்த குற்றச்சாட்டுக்கள் பற்றி ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின்
கூட்டத்தில் மீண்டும் விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், ஜெனிவாவில் உள்ள அம்னஸ்டி
இண்டர்நாஷனல் அமைப்பு, இச்செவ்வாயன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. போர்
குற்றவாளிகளை நீதிக்கு முன் நிறுத்துவதற்காக மேலும் நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கை அரசை
வலியுறுத்தும் வகையிலான தீர்மானம் ஒன்றை அமெரிக்கா, ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின்
முன் தாக்கல் செய்திருக்கிறது.