பிறரன்பு நம் ஒவ்வொருவரையும் இணைக்கும் என்பதை வலியுறுத்தவே திருத்தந்தையின் திருப்பயணம்
என்கிறார் கியூபா நாட்டுப் பேராயர்
மார்ச்,13,2012. கியூபாவில் அன்னைமரி சிலை அற்புதவிதமாக கண்டெடுக்கப்பட்டதன் 400ம் ஆண்டை
விசுவாசிகளுடன் இணைந்து சிறப்பிக்க, பிறரன்பின் திருப்பயணியாக வரும் திருத்தந்தையைச்
சிறப்பான விதத்தில் வரவேற்க நம்மையேத் தயாரிப்போம் என அழைப்பு விடுத்துள்ளார் அந்நாட்டு
ஆயர் பேரவைத்தலைவர் பேராயர் Dionosio Garcia Ibanez. கியூபத் திருஅவைக்குத் திருத்தந்தை
16ம் பெனடிக்டின் திருப்பயணம் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதன் விளக்கமாக வெளியிடப்பட்டுள்ள
பேராயர் Garcia Ibanezன் இவ்வறிக்கை, பகைமையினாலோ பிரிவினைகளாலோ எதையும் கட்டியெழுப்ப
முடியாது என்பதை உணர்த்தவும், பிறரன்பே நம் ஒவ்வொருவரையும் இணைக்கும் என்பதை வலியுறுத்தவுமே
திருத்தந்தையின் திருப்பயணம் கியூபாவில் இடம்பெறும் என்று எடுத்துரைக்கிறது. திருத்தந்தையின்
வருகைக்கான வெளிப்புற தயாரிப்புகள் இடம்பெறும் அதேவேளை ஆன்மீகத் தயாரிப்புகள் குறித்தும்
நாம் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என்ற அழைப்பையும் விசுவாசிகளுக்கு விடுத்துள்ளார்
பேராயர். உள்மனமாற்றத்திற்கு அழைப்பு விடுக்கும் தவக்காலத்தில் இடம்பெறும் இத்திருப்பயணம்,
ஒருமைப்பாடு, பிறரன்பு, கருணை அகியவைகளுக்கு அழைப்பு விடுப்பதுடன், மேலும் ஒரு கொடையாகவும்
உள்ளது என்றார் பேராயர் Garcia Ibanez.