சில வாரங்களுக்கு முன்
எனக்கு வந்த ஒரு மின்னஞ்சலில் “The Smiling Jesus” என்ற தலைப்பில் பல படங்கள் வந்து சேர்ந்தன.
மிக அழகான படங்கள். அவை அனைத்திலும் இயேசு குழந்தைகளுடன் விளையாடும் காட்சிகள் வரையப்பட்டிருந்தன.
அந்த ஓவியங்களில் இயேசு வாய்விட்டுச் சிரித்துக் கொண்டிருந்தார். நான் அதுவரைப் எண்ணிப்
பார்த்திராத கோணத்தில் இயேசுவைச் சித்தரித்த படங்கள் அவை. 'இந்த ஓவியங்களைக் கோவில்களில்
வைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்' என்று எனக்குள் நானே எண்ணிக்கொண்டேன். இதுபோன்ற ‘வித்தியாசமான’
ஓவியங்களைக் கோவிலில் பீடமேற்றினால், மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்ற கேள்வியும் உடன்
எழுந்தது. இதே கேள்வி இன்று என் மனதில் மீண்டும் எழுந்துள்ளது. காரணம்? இன்று நாம் நற்செய்தியில்
சந்திக்கும் ‘வித்தியாசமான’ இயேசு.
தவக்காலத்தின் முதல் ஞாயிறு இயேசுவை நாம் பாலை
நிலத்தில் சந்தித்தோம். பசியோடு, களைப்போடு இருந்த இயேசு அவர். இரண்டாவது வாரம் இயேசுவை
நாம் மலைமீது சந்தித்தோம். உருமாறி, ஒளிவெள்ளத்தில் தோன்றிய இயேசு அவர். தவக்காலத்தின்
மூன்றாவது ஞாயிறான இன்று இயேசுவைக் கோவிலில் சந்திக்கிறோம். கோபக்கனல் தெறிக்கத் தோன்றும்
இந்த இயேசு நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறார். தவக்காலத்தின் மூன்று ஞாயிறும் நாம்
சிந்தித்த காட்சிகளை ஓவியங்களாகப் பார்த்திருக்கிறோம். இந்த மூன்று ஓவியங்களில், பாலை
நிலத்திலும், மலைமீதும் நாம் சந்தித்த இயேசுவைக் கோவில்களில் பீடமேற்ற தயங்கமாட்டோம்.
ஆனால், எருசலேம் கோவிலில் நாம் இன்று சந்திக்கும் இயேசுவை பீடமேற்ற முடியுமா? இந்தக்
கேள்விக்குப் பதில் சொல்லத் தயங்குகிறோம். கோவில்களில் நாம் பார்க்கும் இயேசுவின்
திரு உருவங்கள் சாந்தம் நிறைந்த உருவங்கள், வெற்றிவாகை சூடிய உருவங்கள், அல்லது சிலுவையில்
துன்புறும் உருவங்கள். இவ்வளவு அமைதியாய், சாந்தமாய் நாம் கோவில்களில் காணும் இயேசு,
ஒருநாள் கோவிலுக்குச் சென்றபோது, கோபம் கொண்டார். கோவிலைச் சந்தையாக மாற்றியவர்களைச்
சாட்டையெடுத்து விரட்டினார். இன்று அவர் நம் கோவில்களுக்கு வந்தால் என்ன நினைப்பார்,
எப்படி நடந்துகொள்வார் என்பதை சிந்தித்துப் பார்க்க நமக்கு ஒரு வாய்ப்பு இன்று தரப்பட்டுள்ளது. இயேசுவின்
வாழ்வை ஒரு திரைப்படமாக என் எண்ணங்களில் பார்த்திருக்கிறேன். அத்திரைப்படத்தில் நான்
மிகவும் இரசித்து கைதட்டிய ஒரு காட்சி, இயேசு எருசலேம் கோவிலைத் தூய்மைப்படுத்திய காட்சி.
எந்த ஒரு திரைப்படத்திலும், கதையிலும் வில்லன்களை விரட்டியடிக்கும் நாயகனை கைதட்டி இரசிப்போம்
இல்லையா? அதையொத்த ஓர் எண்ணம் இது. கோவிலைத் தூய்மைப்படுத்தும் கதாநாயகன் இயேசுவை இன்று
சந்திப்போம், சிந்திப்போம்.
கோவிலுக்குச் சென்றால் நாம் தூய்மை பெறலாம் என்ற எண்ணம்தான்
நம்மில் பலருக்கு உண்டு. ஆனால், இங்கோ இயேசு கோவிலைத் தூய்மைப்படுத்துகிறார். இஸ்ரயேல்
மக்களின் வாழ்வில் தனியொரு இடம் பிடித்த எருசலேம் கோவில், அந்த உலகப் புகழ்பெற்ற புனிதத்
தலத்தில் இயேசு கோபத்துடன் நடந்து கொண்ட காரணம் ஆகியவற்றைப் புரிந்து கொள்வது பயனளிக்கும். இங்கு
நான் பகிர்ந்து கொள்ளும் எண்ணங்கள் என் சொந்தக் கற்பனையில் தோன்றிய எண்ணங்கள் அல்ல. ஒரு
சில விவிலிய விளக்கங்கள், மறையுரைகள் இவற்றிலிருந்து நான் திரட்டியவை. எருசலேமில் அன்று
நடந்ததாக நான் கூறும் விவரங்களுக்கும், இன்று நாம் நடைமுறையில் காணும் பல நிகழ்வுகளுக்கும்
நெருங்கிய ஒப்புமை இருந்தால், நாம் கேள்விகளை எழுப்பவும், பதில்களைத் தேடவும் கடமைப்பட்டுள்ளோம். "யூதர்களுடைய
பாஸ்கா விழா விரைவில் வரவிருந்ததால் இயேசு எருசலேமுக்குச் சென்றார்" என்று இன்றைய நற்செய்தி
துவங்குகிறது. இஸ்ரயேல் மக்கள் அனைவரும் பாஸ்கா விழாவையொட்டி எருசலேமுக்குச் செல்ல வேண்டும்,
அந்த ஆண்டுக்கான காணிக்கையைக் கோவிலில் செலுத்த வேண்டும். இது இஸ்ரயேல் மக்களுக்கு விதிக்கப்பட்ட
கட்டளை. இயேசுவும் ஒரு யூதருக்குரிய கடமைகளை நிறைவேற்ற கோவிலுக்குச் சென்றார். அங்கு
சென்றவர் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்தார். ஏற்கனவே, அவர் 12 வயது சிறுவனாக, முதல்முறை
எருசலேம் கோவிலுக்குச் சென்றபோது, அவர் கண்ட ஒரு சில காட்சிகள் அவரைப் பாதித்திருக்க
வேண்டும். அதன்பின் ஒவ்வோர் ஆண்டும் அவர் அங்கு சென்று திரும்பியபோதெல்லாம் அவர் உள்ளத்தை
வேதனையும், கேள்விகளும் நிறைத்திருக்க வேண்டும். இத்தனை ஆண்டுகள் அந்த வேதனைகளுக்கும்,
கேள்விகளுக்கும் விடைதேடி வந்த இயேசு, இன்று தானே விடையாக மாறத் துணிந்தார்.
இயேசுவுக்குள்
இத்தனைக் கேள்விகளும் வேதனைகளும் உருவாகக் காரணம்... ஏழைகளும், புற இனத்தாரும் அடைந்த
துன்பங்கள். இயேசுவே ஓர் எளியக் குடும்பத்தில் பிறந்தவர் என்பதால், ஏழை யூதர்கள் பட்ட
அவஸ்தைகளை அவரும் அடைந்திருப்பார். இறைவனைக் காண எருசலேம் செல்வோம் என்ற ஆர்வத்தோடு இந்த
ஏழைகள் ஆண்டு முழுவதும் சிறுகச் சிறுகச் சேமித்து, எருசலேம் கோவிலுக்கு வந்தபோது, அவர்கள்
அங்கு சந்தித்தப் பிரச்சனைகள் பல. ஆண்டவனுக்குக் காணிக்கை செலுத்தவேண்டும் என ஆண்டு
முழுவதும் தங்கள் வீடுகளில் கண்ணும்கருத்துமாய் அவர்கள் வளர்த்து எடுத்து வந்த ஆடு, மாடு,
புறா போன்ற காணிக்கைகளைக் குருக்களிடம் கொண்டு சென்றபோது, அந்தக் காணிக்கைகளில் ஏதாவது
ஒரு குறை கண்டனர் குருக்கள். குறையுள்ள காணிக்கைகளை அவர்கள் ஏற்க மறுத்தனர். எனவே, அந்த
ஏழைகள் கோவிலில் அநியாய விலைக்கு விற்கப்பட்ட ஆடு, மாடு, புறா இவைகளை வாங்க வேண்டிய கட்டாயத்திற்குத்
தள்ளப்பட்டனர். ஆண்டு முழுவதும் அவர்கள் சேமித்து வைத்த பணமெல்லாம் ஒரு காணிக்கை வாங்குவதற்கே
பற்றாமல் போயிற்று. சரியான காணிக்கையைச் செலுத்தவில்லையெனில் கடவுள் அவர்களைப் புறக்கணித்துவிடுவார்
என்ற அச்சத்தை, தயங்கித் தவித்துக் கொண்டிருந்த ஏழைகளிடம் குருக்கள் திணித்தனர்.
அடுத்ததாக,
கோவிலுக்குச் செலுத்தவேண்டிய காணிக்கைப் பணமும் பிரச்சனைகளை எழுப்பியது. இஸ்ரயேல் மக்கள்
அன்றாட வாழ்வில் பயன்படுத்திய நாணயம் உரோமைய நாணயம். அந்த நாணயத்தைக் கோவில் காணிக்கையாகச்
செலுத்தக் கூடாது, ஏனெனில் அந்த நாணயத்தில் சீசரின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. எனவே
காணிக்கை செலுத்தும் அனைவரும் கோவிலுக்கு வெளியே இருந்த நாணயம் மாற்றுமிடங்களில் தாங்கள்
சேமித்து வைத்திருந்த உரோமைய நாணயங்களைக் கொடுத்து, கோவிலுக்கு ஏற்ற நாணயங்களை வாங்க
வேண்டும். இந்த வர்த்தகத்திலும் ஏழைகள் அதிகம் ஏமாற்றப்பட்டனர். காணிக்கைப் பொருட்களின்
வியாபாரம், நாணயம் மாற்றும் வியாபாரம் என்று அனைத்து வியாபாரங்களிலும், கோவில் குருக்களுக்குப்
பங்கு இருந்தது. ஆண்டு முழுவதும் காத்திருந்து, கஷ்டப்பட்டு பணம் சேர்த்து, இறைவனைக்
காண வந்தால், இங்கு இறைவனைக் காண இத்தனைத் தடைகள் உள்ளனவே... அவர்கள் தரிசிக்க வந்த இறைவன்,
அவர்களது ஒருவருட சேமிப்பையெல்லாம் தாண்டி, ஒவ்வோர் ஆண்டும் உயர, உயர விலகிச் செல்கிறாரே
என்ற தவிப்பு அவர்கள் மனதை ஆக்கிரமித்தது. இறைவனின் இல்லத்தில், அவரது கண் முன்பாகவே
இத்தனை அக்கிரமங்கள் நடக்கின்றனவே என்று ஆயிரமாயிரம் ஏழைகளும், நேரிய மனத்தவரும் வெந்து,
புழுங்கிக் கொண்டிருந்தனர்.
இதே வேதனை, இதே புழுக்கம் யூதர் அல்லாத புற இனத்தவருக்கும்
இருந்தது. எருசலேம் கோவிலில் வியாபாரங்கள் நடந்ததெல்லாம் கோவிலின் வெளிச் சுற்றில். இந்த
வெளிச்சுற்று புற இனத்தவர் அவை (The Court of the Gentiles) என்று அழைக்கப்பட்டது. புற
இனத்தவர் இந்த வெளிச்சுற்றில் மட்டும் நின்று இறைவனைத் தரிசிக்க அனுமதி உண்டு. இந்த வெளிச்
சுற்றில் கடைகள் கூடிவிட்டதால், கடவுள் காணாமல் போய்விட்டார். சாமி வரம் கொடுத்தாலும்,
பூசாரி வரம் கொடுக்காத கதையாய், இறைவனைக் காண ஆவலாய் வந்திருந்த புற இனத்தவர் இறைவனைக்
காண முடியாமல் ஏமாற்றம் அடைந்திருக்க வேண்டும். அவர்களுக்கென குறிக்கப்பட்டிருந்த வெளிச்சுற்றை
ஆக்கிரமித்திருந்த சந்தையைக் கண்டு, இறைவன் மீதே ஓரளவு வெறுப்பை வளர்த்துக் கொண்டு திரும்ப
வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டிருக்கலாம். ஏழைகளையும் புற இனத்தவரையும் வாட்டி
எடுத்த கேள்விகள், வேதனைகள் இயேசுவையும் வாட்டி எடுத்தன. இந்த வேதனை கோபமாக வடிவெடுத்தது.
ஏழை யூதர்களும், புற இனத்தவரும் கடவுளைச் சந்திக்க முடியாதபடி, ஒரு சந்தையாக, கள்வரின்
குகையாக மாற்றப்பட்டிருந்த கோவிலைச் சுத்தம் செய்ய முடிவெடுத்தார் இயேசு.
பாஸ்கா
விழா காலத்தில் எருசலேம் கோவிலுக்கு ஒரு இலட்சம் பக்தர்களாகிலும் வருவர் என்பது விவிலிய
ஆய்வாளர்களின் கணிப்பு. அந்த ஒரு இலட்சம் பேருக்குத் தேவையான ஆடு, மாடு, புறா என்ற காணிக்கைகள்
குறைந்தது பல ஆயிரங்களாக கோவிலில் குவிந்திருக்க வேண்டும். தனியொரு மனிதராய் இந்த வியாபாரக்
கோட்டையைத் தகர்க்கத் துணிந்த அந்த மனம் சாதாரண மனம் அல்ல... இறைமகன் இயேசு எருசலேம்
கோவிலில் செய்த அந்தப் புரட்சியை நாம் ஒரு புதுமையாகவே பார்க்கவேண்டும். அவ்வளவு பெரிய
ஒரு நிறுவனத்தை எப்படி தனியொரு மனிதர் தலைகீழாக மாற்றத் துணிந்தார்? எப்படி அந்த நேரத்திலேயே
அவர் கொல்லப்படாமல் தப்பித்தார் என்பதெல்லாம் புதுமைதான். இந்தப் புதுமையை எண்ணிப் பார்க்க
நமக்கு திருஅவை இன்று ஒரு வாய்ப்பை அளித்துள்ளது. கோபக்கனல் தெறிக்க இயேசு இந்தக்
கோட்டையைத் தாக்கியபோது, அவர் எந்த அதிகாரத்தில் இவற்றைச் செய்கிறார் என்ற கேள்வி எழுந்தது.
இயேசு அந்தக் கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்லாமல், “இக்கோவிலை இடித்துவிடுங்கள். நான்
மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன்” என்ற சவாலை அவர்கள் முன் வைத்தார் என்று இன்றைய
நற்செய்தியில் வாசிக்கிறோம். இதைக் குழந்தைத்தனமான சவாலாக நாம் பார்க்கலாம்; அல்லது,
கடவுளால் மட்டுமே செய்துமுடிக்கக் கூடிய ஒரு சவாலாகவும் கருதலாம்.
இயேசு கூறிய
அந்தக் கோவில் அவரது உடல் என்றும் யோவான் தன் நற்செய்தியில் கூறுகிறார். முற்றிலும் தகர்க்கப்பட்டு,
சிலுவையில் அறையப்பட்ட இந்தக் கோவிலை கடவுள் மூன்று நாட்களில் மீண்டும் கட்டியெழுப்பினார்.
இந்தக் கோவிலில் வியாபாரங்கள் கிடையாது, கடவுளை விலை பேச முடியாது, வெளிச் சுற்று, உள்சுற்று
என்ற பாகுபாடுகள் கிடையாது, வறியோர், செல்வந்தர், பாவி, புண்ணியவான், யூதர், புற இனத்தவர்,
ஆண், பெண் என்ற எந்தப் பாகுபாடுகளும் இல்லாமல் அனைவரும் உள்ளே வரலாம். இறைவனை எந்தத்
தடையும் இல்லாமல் கண்ணாரக் கண்டு நிறைவடையலாம். இத்தகைய அழகிய கோவில்கள் நம் சமுதாயத்தில்
மீண்டும் மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்று இறைவனிடம் மன்றாடுவோம்.