சுத்தமான குடிநீர்: மில்லென்னிய இலக்கு எட்டப்பட்டதாக கூறுகிறது ஐ.நா.
மார்ச்,07,2012. உலகில் சுத்தமான தண்ணீர் கிடைக்காதவர்களுடைய எண்ணிக்கையைப் பாதியாகக்
குறைப்பது என்ற மில்லென்னிய வளர்ச்சி இலட்சியங்களில் முதலாவது இலக்கு, 2015ஆம் ஆண்டு
என்ற காலக்கெடுவைத் தொடுவதற்கு முன்பாக இப்போதே எட்டப்பட்டுள்ளது என ஐ.நா.அவை கூறுகிறது. உலகின்
89 விழுக்காடு மக்களுக்கு தற்போது மாசுபடாத குடிநீர் ஆதாரங்கள் இருப்பதாகத் ஐ.நா. தெரிவிக்கிறது.
இக்கணக்கின்படி உலகில் ஏறத்தாழ 80 கோடிப் பேர் இன்னும் அசுத்தமான குடிநீரை அருந்த
வேண்டிய நிலையில் உள்ளனர். இந்த எண்ணிக்கையில் 40 விழுக்காட்டினர் சஹாராவுக்கு தெற்கில்
அமைந்துள்ள நாடுகளில் வாழ்பவர்கள் என ஐ.நா.அவை கூறுகிறது. இந்த மில்லென்னிய வளர்ச்சி
இலட்சியத்தின் மறுபாதியான சுகாதாரமான கழிப்பிட வசதிகள் என்ற இலக்கை எட்ட வாய்ப்பு இல்லை
என்றும் ஐ.நா.கூறுகிறது. ஏனென்றால், இந்தியாவில் மட்டுமே சுமார் 60 கோடிப் பேர் இன்னும்
சுகாதாரமான கழிப்பறை வசதிகள் இல்லாமல் இருந்துவருகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.